பே-இமானித்தனம்
கையில் கிடைக்கும் காகிதத்தை எல்லாம் - அது கடலை பொதிந்து வந்த காகிதமானாலும் - ஒரு எழுத்துவிடாமல் படிக்கும் பழக்கம் எனக்கு ஒன்பது அல்லது பத்து வயதிலேயே தொற்றிவிட்டது. அந்நாட்களில் தமிழ் நாளிதழ்களில் ஏதாவது ஒரு அரசியல்வாதி - காளிமுத்துவோ, ஜெயலலிதாவோ, வைக்கோவோ - எதிரணியில் இருக்கும் மற்றொரு அரசியல்வாதியை "தமிழகத்து கோயபெல்ஸ்" அல்லது "இந்தியாவின் கோயபெல்ஸ்" என்ற அடைமொழியுடன் விளித்து பேசியதாகச் செய்திகள் இடம்பெற்றிருக்கும். அது ஏதோ ஒரு வசை என்று புரிந்தாலும் கோயபெல்ஸ் என்றால் என்ன என்று அப்போது குழம்பியது நினைவிருக்கிறது. இந்த கோயபெல்ஸ் தான் ஒரு பெரிய பொய்யைச் சொல்லி பின்பு அதிலிருந்து பின்வாங்காமல் அதையே திரும்பத் திரும்பச் சொல்லும் உத்தியை அறிமுகப்படுத்தியவர் என்று பின்னாளில் தெரிந்துக்கொண்டேன். கடந்த இரு வாரங்களாக தமிழ் வலைப்பதிவுகளில் இந்த உத்தியின் மிகச்சிறந்த செய்முறை விளக்கம் ஒன்றைக் காணும் பேறு கிடைத்திருக்கிறது.
*****
பத்து நாட்களுக்கு முன் தமிழ்மணம் நிர்வாகம் வெளியிட்டிருந்த ஒரு அறிவிப்பைப் படித்தேன். தமிழ்மண நிர்வாகத்திடம் சில விளக்கங்களை கேட்டிருந்த ஒரு பதிவருக்கு அதில் பதில் அளித்திருந்தார்கள். மேற்படி பதிவர் எழுதியிருந்த சில வரிகளை அந்த அறிவிப்பில் மேற்கோள் காட்டியிருந்தார்கள். அதை இங்கே இடுகிறேன்:
"தமிழ்மண கருவிப்பட்டை இருக்கும்போது நமது ஒவ்வொரு செயலும் தமிழ்மணத்தால் பதிவு செய்யப்படும் வாய்ப்பிருக்கின்றது. இந்த தகவல்கள் யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன, who is privy to all these details, யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது நல்லது."
இதில் இரண்டு கேள்விகள் இருக்கின்றன.
கேள்வி 1: (பதிவர்கள் பற்றிய தகவல்கள்) யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன?
கேள்வி 2: (தமிழ்மணத்தை நிர்வகிப்பவர்களில்) யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் தமிழ்மணம் நிர்வாகம் அந்த அறிவிப்பில் ஒன்றன்பின் ஒன்றாகப் பதில் சொல்லியிருந்தது. தினத்தந்தி பாணியில் ஒவ்வொன்றுக்கும் தனித் தலைப்பு போட்டுவிடுகிறேன்.
முதல் கேள்விக்கு பதில்
பதிவர்கள் பற்றிய தகவல்கள் யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்ற முதல் கேள்விக்கான பதில்:
“Policy of Privacy பக்கத்தில் பதிவர்களின் அந்தரங்கத் தகவல் சேகரிப்பது பற்றியும், அவை முறையான விண்ணப்பமூடே சட்டம் கொணரக் கேட்டாலன்றி, எந்நிலையிலுங்கூட, எவருடனும் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது."
ஆங்கிலத்திலும் சொல்லியிருக்கிறார்கள்:
"Specific information such as name, IP address, email address, or other contact information will never be shared with anyone unless ordered by a court of law.”
இரண்டாவது கேள்விக்கு பதில்
தமிழ்மணத்தை நிர்வகிப்பவர்களில் யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்ற இரண்டாவது கேள்விக்கான பதில்:
"இந்நிறுவனத்தினை நடத்துகின்றவர்களின் பெயர்கள் இத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்குமேல் ஒரு பதிவருக்குத் தமிழ்மணத்தின் உள்ளமைப்பு, நிர்வாகம் தொடர்பாக எவ்விதமான மேலதிகத்தகவலும் தேவையில்லை, அப்படியாகத் தரவேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கருதுகிறோம். தமிழ்மணத்தின் திட்டங்கள் நிர்வாகக் குழுவுக்குள் நாட்டின் சட்டங்களுக்கும் நிறுவன விதிகளுக்கும் அமைய விவாதிக்கப்பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்."
*****
நான் தமிழ்ப் புலவன் இல்லை. என் தமிழ் படிப்பு பதினாறு வருடங்களுக்கு முன்பு பள்ளிப்படிப்போடு முடிந்துவிட்டது. இருப்பினும் மேலே உள்ளதைப் புரிந்துக்கொள்வதில் எனக்கு கடுகளவு கூட பிரச்சனை இல்லை. பதிவர்களின் அந்தரங்கத் தகவல்களை முறையாக நீதிமன்ற உத்தரவு மூலம் கேட்டால் தவிர எந்நிலையிலும் எவருடனும் பகிர்ந்துக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகிகளின் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை அவர்கள் விரும்பினால் மட்டுமே தார்மீகக் காரணங்களுக்காக பதிவர்களுக்கு தரமுடியும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு வெவ்வேறு கேள்விகளுக்கான பதில்கள் அவை.
இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் கழித்து என் மகன் கூட இதை வாசித்து சரியாகப் புரிந்துக்கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கிறது. (இப்போது அவனுக்கு வயது இரண்டு.) ஆனால் தமிழில் வலைப்பதிவு எழுதும் அளவுக்குத் தமிழ் தெரிந்த சிலருக்கு இது தலைகீழாக அல்லது கால்மேலாக புரிந்திருக்கிறது. இந்த அறிவிப்பு வந்த அன்றே ஒரு தவறான தகவல் அல்லது பொய் உருவாக்கப்பட்டது. பதிவர்களின் அந்தரங்கத் தகவல்களை தார்மீகக் காரணங்களுக்காகத் தமிழ்மணம் நிர்வாகம் மற்றவர்களுக்கு அளிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது / பரப்பப்பட்டது. கடந்தப் பத்து நாட்களாக குறைந்தது ஒரு இருபது பதிவுகளிலாவது இந்த தவறான தகவல் / பொய் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பேன். இப்படி எழுதியவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறேன்.
பிரிவு 1: உண்மையிலேயே தவறாகப் புரிந்துக்கொண்டவர்கள்.
பிரிவு 2: சரியாகப் புரிந்துக்கொண்டு வேண்டுமென்றே பொய்யானத் தகவலைப் பரப்புபவர்கள்.
முதல் பிரிவில் இருப்பவர்களைக் குறிக்க பொருத்தமான ஒரு சொல் இருந்தால் மேற்கொண்டு விளக்குவதற்கு வசதியாக இருக்கும். ஆனால் அப்படி ஒரு சொல்லை மெனக்கெட்டுக் கண்டுபிடிப்பதற்கான நேரம் கைவசம் இல்லாததால் இப்போதைய வசதிக்காக அவர்களைக் குறிக்க இங்கிலீஷ்காரர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். இங்கிலீஷ்காரர்களுக்கு மேலே தமிழில் எழுதப்பட்டிருப்பது புரியாமல் போனது மற்றும் தமிழ்மணம் அறிவிப்புகளில் பயன்படுத்தப்படும் மொழி/நடை மீது அவர்களுக்கு இருக்கும் இனம்தெரியாத வெறுப்பு ஆகியவற்றின் பின்னணியில் உள்ள சமூக காரணங்களை புரிந்துக்கொள்வது நல்லது. இது எந்த விதத்திலும் அவர்களைக் குறை சொல்வதாகாது. உண்மையில் கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நிலவும் விசித்திரமான ஒரு கலாச்சாரப் போக்கு ஏற்படுத்திய பாதிப்புக் காரணமாகவே அவர்கள் அவ்வாறு நடந்துக்கொள்கிறார்கள்.
இன்று கல்லூரிப் படிப்பு முடித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு சராசரி தமிழக இளைஞனின் தமிழ் சொற்தொகை (vocabulary) மிகக் குறைவானது. அந்த சொற்தொகையை வைத்து அவனால் எதைக் குறித்தும் - குறிப்பாக இலக்கியம், அறிவியல், சட்டம், தத்துவம் போன்றவற்றைக் குறித்து - ஆழமாக பேசவோ விவாதிக்கவோ முடியாது. ஐஸ்வர்யாவின் திருமணம், ஜூனியர் விகடன் கழுகாரின் செய்திகள், ரஜினிகாந்தின் 'ஒரு தடவை சொன்னா' தத்துவம், வடிவேலின் அவ்வ்வ் என்ற ஊளை போன்ற இலகுவான விஷயங்களை விவாதிக்க மட்டுமே அவனது தமிழ் போதுமானதாக இருக்கிறது. அதற்கு தன்னுடைய உழைப்பின்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கும் அவன் அதை தமிழ் மொழியின் குறைபாடாக நினைக்கிறான். ஆனால் அப்படி அல்ல, சிக்கலான சிந்தனைகளையும் தமிழில் வெளிப்படுத்தலாம் என்று யாராவது செய்துக் காட்டினால் எரிச்சல் அடைந்து நக்கல் நையாண்டி மூலம் அதை எதிர்கொள்கிறான். அல்லது நடையை எளிமைப்படுத்துமாறு கோரிக்கை வைக்கிறான். (இதே ஆட்கள் ஒரு ஆங்கிலக் கட்டுரை புரியவில்லை என்றால் அதன் ஆசிரியரிடம் எளிமையாக எழுதுங்கள் என்று கனவில் கூட கேட்கமாட்டார்கள். அகராதியின் துணையுடன் நேரம் செலவிட்டு உழைத்து புரிந்துக்கொள்வார்கள். எனக்கு எளிமையான ஆங்கிலம் மட்டும் தான் புரியும் என்று சொல்வதை விட நாற்சந்தியில் அம்மணமாக நிற்பார்கள். ஆனால் தமிழில் மட்டும் எளிமை வேண்டும்.)
இதற்கு தமிழ்நாட்டுச் சூழல் தான் காரணம். "தமிழ்" நாளிதழ்கள் உயர்நீதிமன்றம் என்ற சொல் வாசகனுக்குப் புரியாது என்று அதை ஐ(!)கோர்ட்டு என்று "எளிமைப்படுத்தி" அச்சிடுகின்றன. இன்று இணையம், கணினி, வலைப்பக்கம், விசைப்பலகை, இசைவட்டு போன்ற சொற்களை வழக்கில் நிலைபெறச் செய்தது தமிழ்நாட்டு ஊடகங்களின் ஆதிக்கத்துக்கு வெளியே இருக்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தான். "எங்க ஆக்டிவிடீஸ் பத்தின டீடெய்ல்ஸ் எல்லாம் எத்திக்கல் ரீசன்ஸுக்காக நாங்களே வாலன்டரியா கொடுப்போம்" என்று தமிழ்மண நிர்வாகம் "எளியத் தமிழில்" அறிவிப்புகளை வெளியிட்டிருந்தால் சராசரி தமிழ்நாட்டு இளைஞன் கருத்தை கச்சிதமாக கவ்வியிருப்பான். அதை விட்டுவிட்டு செயற்பாடுகள், தார்மீகம் என்றெல்லாம் எழுதினால் அவன் என்ன செய்வான்?
தமிழ்நாட்டு இங்கிலீஷ்காரர்களுக்கு மற்ற நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைப் பேணுவது ஒருவித எரிச்சலை அளிப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஈழத்தமிழர் விஷயத்தில் தான் என்றில்லை. சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி செய்திகளில் பயன்படுத்தப்படும் தூயத் தமிழைக் கூட தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் நக்கலடிப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ("என்ன தமிழுய்யா இது? திருவாட்டிங்கிறான், மின்தூக்கிங்கிறான்...") மற்ற நாட்டுத் தமிழர்களுக்குத் தன்னைப் போல தாய்மொழி எதிர்ப்பு என்னும் ஈன அரசியலை செய்யவோ அல்லது அந்த அரசியலுக்கு சப்ளாக்கட்டை அடிக்கவோ வேண்டியக் கட்டாயம் எதுவும் இல்லை என்பதைக் கூட இவர்கள் புரிந்துக் கொள்வதில்லை.
இத்தகையவர்களுக்கு தமிழ் வலைப்பதிவுகளில் ஆழமான அல்லது "புரியாத" விஷயங்கள் பேசப்படுவது அன்னியமான ஒன்றாகத் தெரிகிறது. தங்கள் வேலை அலுப்பைப் போக்க அவ்வப்போது வந்து விளையாடிச் செல்லும் களிப்பிடமாகவே (எழுத்துப்பிழை அல்ல) இவர்கள் தமிழ் வலைப்பதிவுகளை காண்கிறார்கள். குமுதம், விகடன், குங்குமம் போன்றவற்றின் நீட்சியாக என்று சொல்லலாம். அதே மொழியைப் பேசி, அதே நையாண்டி மேளத்தை வாசித்து, அதே வெற்றுக் கோஷங்களை எழுப்பி...
எனக்கு நெருக்கமான ஒருவருக்கு ரமணி சந்திரனின் எழுத்துப் புரிகிறது. ஜெயமோகன் புரிவதில்லை. ஜெயமோகன் எல்லாருக்கும் புரியும்படி எழுதினால் என்ன என்று கேட்டார். என்ன செய்யட்டும்? ஒன்று அவரிடம் இப்படி சொல்லாம்: "ஜெயமோகனது எழுத்தை ஆயிரக்கணக்கானவர்கள் புரிந்து ரசிக்கிறார்கள். நீங்களும் கொஞ்சம் உழைத்தால் புரிந்துக்கொள்ளலாம்". அல்லது ஜெயமோகனுக்கு மடல் அனுப்பி ரமணி சந்திரனைப் போல எளிமையாக எழுதுமாறு கேட்டுக்கொள்ளலாம். இன்னும் ஒருபடி மேலே போய் சிந்துபாத் கதையைப் போல் சகலருக்கும் புரியுமாறு எழுதச்சொல்லலாம். இங்கிலீஷ்காரர்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.
முதல் பிரிவினரைக் குறித்து நிறையச் சொல்லியாகிவிட்டது, அவர்களில் சிலரிடமாவது ஏதாவது மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில். இரண்டாம் பிரிவினரின் மேல் அத்தகைய நம்பிக்கைகள் ஏதும் இல்லாததால் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். தார்மீகக் காரணங்களுக்காகப் பதிவர்களின் தகவல்களை தருவோம் என்று தமிழ்மணம் "தெளிவாகவே" சொல்லிவிட்டதாக எழுதுபவர்கள் தான் தமிழ்மணம் அறிவிப்பு "குழப்பமாக" இருப்பதாகவும் எழுதுகிறார்கள். தெளிவா, குழப்பமா என்பதில் கூட ஒரு தெளிவு இல்லையா? இந்த அறிவிப்பை வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திரித்து, இத்தனை முறை தெளிவுபடுத்திய பிறகும் விளங்காதது போல் நடித்துக்கொண்டு சற்றும் கூச்சமில்லாமல் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல ஒரு பே-இமானித்தனம் ஏதும் இல்லை. அப்படி இல்லை என்றால் தவறாகப் புரிந்துக்கொண்டதை ஏற்றுக்கொண்டு மீதி இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக்கொள்வது நல்லது.
உருது/இந்தி தெரியாதவர்களுக்கு: பே-இமான் -> நேர்மையற்றவன், நம்பத்தகாதவன் (இமான்தாரி -> நேர்மை)