நவீன மெக்காலேக்கள்: சமூகநீதி எதிர்ப்பு அரசியல்

தொடரும் போட்டுவிட்டுத் தொலைந்துபோய் ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் எழுத நினைத்தவற்றை எல்லாம் மூளையின் மூலைகளிலிருந்துப் பொறுக்கியெடுத்து அடுக்குவது சற்றே ஆயாசம் தருவதாக இருக்கிறது. சென்ற பதிவில் சமஸ்கிருதமயமாக்கல் எனும் போக்கின் நீட்சியாக படித்த, நகர்புற ஆதிக்கசாதியினரின் அடையாளங்களை ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் நகலெடுப்பது அண்மைக்காலமாக மிகவும் தீவிரமடைந்திருப்பதைப் பற்றி எழுதியிருந்தேன். இயற்கையான சமூக நிகழ்வாக பார்க்கப்படும் இந்த போக்கு உண்மையில் சமூக நீதிக்கு எதிரான சக்திகளுக்கு மிகவும் சாதகமாக இருப்பதையும் அதன் காரணமாகவே அவர்களால் ஊக்குவிக்கப்படுவதையும் அலசுவது அல்லது துவைத்து உலர்த்துவது இந்தப் பதிவின் நோக்கங்களில் ஒன்று.

இந்த நகலெடுப்பு முழுக்க முழுக்க திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்று நான் சொல்லவில்லை. சிலப் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த போக்கைத் தொடங்கி வைத்த ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேறு வழியேதும் இருக்கவில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அதுவரை கல்லூரிப் படிப்பையோ அரசு வேலையையோ அறியாத சமூகங்களிலிருந்து முதன்முறையாக கல்விப் பெற்று அலுவலக வேலைகளுக்குச் சென்றவர்கள் விரைவிலேயே ஒன்றைப் புரிந்துக் கொண்டார்கள். தன்னுடன் பணிபுரிபவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் தன்னுடைய சமூகம் குறித்து தாழ்வான எண்ணம் கொண்ட ஆதிக்கசாதியினர் என்பதே அது. அவர்களைப் போலவே நடந்துக் கொள்வதின் மூலம் அவர்களது அங்கீகாரத்தைப் பெற்று அவர்களது உள் வட்டங்களில் நுழைந்துவிடலாம் என்ற கனவில் தங்கள் பழக்கங்கள், ரசனைகள், பேச்சு, வாசிப்பு, வீட்டிலிருந்து எடுத்துவரும் மதிய உணவு என்று எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டார்கள். தங்கள் சமுகத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் குலக்குறிகளை மிகக் கவனமாக மறைத்தார்கள். என்னுடைய சுற்றத்தில் இத்தகைய நகலெடுப்பில் கரைகண்ட பிதாமகன்கள் அனைவரின் தொடக்கமும் இப்படித்தான் இருந்திருக்கிறது.

சமூக நீதியை விரும்புபவன் என்ற முறையில் இந்த போக்கினால் விளையும் மிக மோசமான துன்பியல் நிகழ்வாக நான் கருதுவது இதைத் தான்: தன் சமூக அடையாளங்கள் குறித்து வெட்கம் கொண்டு அவற்றை மறைத்து ஆதிக்கச் சாதியினரின் அடையாளங்களை விரும்பி அணியும் ஒருவர் தன்னுடைய சாதி இழிவானது என்றும் ஆதிக்க சாதி உயர்வானது என்றும் தன் மனதின் ஆழத்தில் ஏற்றுக்கொள்கிறார். தன் சுற்றம் மற்றும் பிள்ளைகளின் மனதிலும் இந்த எண்ணத்தை ஏற்றுகிறார். (தர்க்கத்தின் மூலம் உருவாக்கப்படாத இத்தகைய எண்ணங்களை பின்னாளில் தர்க்கத்தின் மூலம் மாற்றுவது மிகவும் கடினம்.) சாதி அமைப்பு எவ்வித சீர்திருத்தமும் இன்றித் தொடரவேண்டும் என்று விரும்புவோரின் அதிகப்பட்ச எதிர்பார்ப்பு இதுதான்.

ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் தங்கள் குலக்குறிகளை மறைப்பதற்காக எந்த அளவிற்கு சிரமம் எடுத்துக் கொள்வார்கள் என்பதை மிக அருகில் இருந்துப் பார்த்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு. குமரி மாவட்டத்தில் கடந்தகாலத்தில் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளான நாடார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அவர்கள் சாதியுடன் தொடர்புடையதாக அறியப்படும் தனிப் பேச்சு வழக்கு உண்டு. எடுத்துக்காட்டாக நாடார்களில் பலர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது "அவர்கள் வந்தார்கள்" என்பதற்கு "அவிய வந்தாவ" என்பார்கள். மீனவர்கள் ஈழத்தின் சிலப் பகுதிகளில் பேசப்படுவதைப் போல மிகவும் இழுத்து பேசுவார்கள். ஆனால் மற்ற சமூகத்தினர் முன்னிலையில் பேச்சில் இந்த அடையாளங்கள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் எடுத்துக் கொள்வார்கள்.

அதே நேரத்தில் 'உயர்'சாதியினரில் பலரும் மற்ற சமூகத்தினருடன் உரையாடும்போது பேச்சில் தம் சாதி வழக்கை தவிர்க்க முயல்வதில்லை. முற்போக்குவாதம் பேசும் அறிவுஜீவிகள் கூட தங்கள் குலக்குறிகளை பொதுவில் வெளிப்படுத்துவதில் எவ்வித தயக்கமோ வெட்கமோ கொள்வதில்லை. உண்மையில் அத்தகைய அடையாளங்கள் பெருமைக்குரிய ஒன்றாகவே சமூகத்தால் பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சி வந்தப் புதிதில் வெளிவந்த வெற்றிகரமான விளம்பரங்களில் பல அப்பட்டமான 'உயர்'சாதி அடையாளங்களையும் சூழலையும் கொண்டவை. ("பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு", "நீ கொழந்தையா இருக்கச்சே அதத்தான் கொடுத்தேன்"...)

****

கேள்வி: மேட்டுக்குடியினரின் கலாச்சாரத்தை மற்றவர்கள் நகலெடுக்கும் போக்குக்கு யார் முக்கியக் காரணம், நகலெடுப்பவர்களா நகலெடுக்கப்படுபவர்களா?

ஏதாவது ஒன்றைப் பெரும்பாலானவர்கள் பின்பற்ற வேண்டும் என்றால் அது உயர்வானது/நாகரிகமானது என்ற பொதுக்கருத்து நிலவ வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை இத்தகைய பொதுக்கருத்துக்கள் உருவாக்கப்படுதலில் ஜனநாயகத்தன்மை அறவே இல்லை என்பதே உண்மை. எடுத்துக்காட்டாக கிரிக்கெட் விளையாட்டைப் பற்றிய பொதுக்கருத்தை உருவாக்கியதில் நாளிதழில் மற்ற அனைத்து விளையாட்டுக்களுக்கும் சேர்த்து அளிக்கப்படும் இடத்தை விட அதிகமாக கிரிக்கெட்டுக்கு அளித்த "தி ஹிண்டு" துணை ஆசிரியர், ஒரு கிரிக்கெட் போட்டியை "வர்ணிப்பதற்கு" அகில இந்திய வானொலியில் ஐந்து நாட்களை ஒதுக்கிய அதிகாரி என்று பலரின் பங்கும் இருக்கக்கூடும். ஆனால் இந்த கருத்துருவாக்கும் கூட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடம் உண்டா, கிராமப்புற பின்னணி கொண்டோருக்கு இடம் உண்டா என்பதெல்லாம் சந்தேகமே. இது மட்டுமல்ல, எது அழகு எது அவலட்சணம், எது தேசபக்தி எது தேசத்துரோகம், எது பற்று எது வெறி என்று எல்லாவற்றைப் பற்றியும் பொதுக்கருத்து உருவாக்கியதில் கிட்டத்தட்ட முழுப்பங்கும் மேட்டுக்குடியினருடையதே. அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சமூக அடையாளங்களை வெறுத்து ஒதுக்கி ஆதிக்க சாதிக் கலாச்சாரத்தை நகலெடுக்கும் போக்கு மேட்டுக்குடியினரால் பரவலாக விரும்பி ஊக்குவிக்கப்படுகிறது.

*****

கேள்வி: ஏன் இப்படி? யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்ற நல்லெண்ணமா? White man's burden மாதிரி ஏதாவது? அதி உயர் நாகரிக சாகரத்தில் மூழ்கி எடுத்த முத்துக்களை எல்லாம் குப்பனோடும் சுப்பனோடும் பகிர்ந்துக் கொள்ளும் பரந்த மனப்பான்மை இந்திய மேட்டுக்குடியினரிடத்தில் தொன்றுத் தொட்டு இருந்து வருகிறதா?

இந்த இடத்தில் கொசுவர்த்திச் சுருளைக் கொஞ்சம் சுற்ற வேண்டியிருக்கிறது. உண்மையில் கொஞ்சம் அல்ல நிறையவே. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் போக வேண்டும். வருடம் 1859. இடம் தென் திருவிதாங்கூர் (இன்றையக் குமரி மாவட்டம்). இரணியல், கோட்டார், திட்டுவிளை மற்றும் பல ஊர்களில் பெரும் கலவரம் வெடிக்கிறது. நாடார் சமூகத்தினரை நாயர்கள் கடுமையாக தாக்கி வீடுகளை எரிக்கின்றனர். காரணம் நாடார் பெண்கள் தங்கள் உடலின் மேல்பகுதியை மறைப்பதற்காக தோள்சீலை எனப்படும் ஒரு துணியை உடலுக்குக் குறுக்காக அணியத் துணிந்தது தான். (பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை திருவிதாங்கூரில் சாணார் என்று அழைக்கப்பட்ட நாடார் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு இடுப்புக்கு மேல் துணி அணியும் உரிமை இருக்கவில்லை. பின்னர் நாடார்களின் போராட்டங்கள் காரணமாகவும் ஐரோப்பிய மிஷனரிகள் ஆங்கில அரசாங்கத்தின் மூலம் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் 1829-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு நாடார் பெண்கள் குப்பாயம் எனப்படும் ஒருவித ரவிக்கையை மட்டும் அணியலாம் என்று அனுமதி அளித்திருந்தும் அது நாயர்களின் எதிர்ப்பு காரணமாக நடைமுறையில் சாத்தியமாகவில்லை.)

1859-ம் ஆண்டு நடந்தக் கலவரங்களின் போது முன்னம் போலவே திருவிதாங்கூர் அரசாங்கம் நாடார்களுக்கு எதிராகவும் 'உயர்'சாதியினருக்கு ஆதரவாகவும் - பெண்கள் தோள்சீலை அணிந்தது சட்டவிரோதம் என்ற - ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. பின்னர் சென்னை ஆங்கில கவர்னரின் கடும் அழுத்தம் காரணமாக மன்னர் மார்த்தாண்ட வர்மா (இசை மேதையாக அறியப்படும் ஸ்வாதி திருநாள் மகாராஜாவின் தம்பி) ஒரு பிரகடனம் வெளியிடுகிறார். அது பின்வருமாறு:

"சாணார் பெண்கள் தங்கள் உடலின் மேற்பகுதியை மறைக்கும் விஷயத்தில் உள்ள எல்லாக் கட்டுபாடுகளும் அகற்றப்படுகின்றன. அவர்கள் தாங்கள் விரும்பிய முறையில் தங்கள் மானத்தை மறைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நிபந்தனைக்கு மட்டும் கட்டுப்படவேண்டும். உயர்சாதிப் பெண்களைப் போல உடை அணியக் கூடாது."

இந்தியாவின் மற்றப் பகுதிகளிலும் ஆதிக்க சாதியினரின் அடையாளங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் நகலெடுக்க முயன்றால் அவர்கள் மீது கடும் வன்முறை ஏவப்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆண்டைகளும் அடிமைகளும் "அவரவர் இடத்தில்" இருந்து தத்தம் தனி அடையாளங்களைப் பேணவேண்டும் என்பதே கடந்த காலங்களில் இந்திய மேட்டுக்குடியினரின் நிலைபாடாக இருந்து வந்துள்ளது. அப்படி இருந்தவர்கள் இன்று தங்கள் முன்னாள் அடிமைகளின் தனி அடையாளங்களை அழித்து தங்கள் அடையாளங்களை - அதிகாரங்களை அல்ல - அவர்கள் மேல் திணிக்க முயல்வதற்கு என்னக் காரணம்?

காரணத்தை ஆங்கிலத்தில் universal adult franchise என்கிறார்கள். வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை. 1949-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது மேற்கத்திய ஜனநாயகங்களைப் போலவே இந்தியாவிலும் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றக் கருத்து நிலவியது. இதற்கு இந்திய மேட்டுக்குடியினர் மற்றும் ஆதிக்கச் சாதியினரிடம் இருந்து பரவலாக எதிர்ப்பு எழுந்தது. பெரும்பாலான மக்கள் படிப்பறிவில்லாத பாமரர்களாக இருக்கும் நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றுக் காரணம் சொல்லப்பட்டது. சில குறைந்தப்பட்சத் 'தகுதிகள்' உள்ளவர்களுக்கு மட்டும் ஒட்டுரிமை அளிக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. "தி ஹிண்டு" நாளிதழ் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பதைக் கடுமையாக எதிர்த்தது. அதன் ஆசிரியர் கஸ்தூரி ஸ்ரீனிவாசன் இவ்வாறு தலையங்கம் எழுதினார்: "பாமர மக்கள் தங்கள் அறியாமையின் காரணமாக ஏமாற்றுக்காரர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கிவிடுவார்கள். இந்த விஷப்பரீட்சையை இன்னும் சில ஆண்டுகள் தள்ளிப் போடுவதால் எந்த இழப்பும் ஏற்பட்டுவிடாது". (பொழிப்புரை: "நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிடும் ஆபத்து இருப்பதால் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும்".)

அன்று இந்தியாவில் வலது, இடது, நடு என்று எல்லாவகை பெரிய அரசியல் இயக்கங்களுக்கும் சாதி அமைப்பின் இருப்பைக் கேள்விக் கேட்காத, சாதி ஒழிப்பு போன்ற நோக்கங்கள் ஏதும் அறவே இல்லாத 'உயர்'சாதி தலைமையே அமைந்திருந்த நிலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்கசாதியினருக்கு எதிராக அணிதிரண்டு அதிகாரத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் இருபது ஆண்டுகளிலேயே நிலைமை மாறியது. தமிழ்நாட்டில் 'உயர்'சாதி எதிர்ப்பு அரசியலை அடையாளமாக கொண்ட இயக்கம் அதிகாரத்தைப் பிடித்தது. அகில இந்திய அளவில் எண்பதுகளின் இறுதியில் - மண்டல் பரிந்துரைகளுக்குப் பின் - மாற்றங்கள் தொடங்கின. நாட்டின் மிகப்பெரிய இரண்டு மாநிலங்களில் அமைப்புக்கு எதிரான பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களாக லாலு யாதவும் முலாயம் யாதவும் அதிகாரத்தைப் பிடித்தனர். தலித் மக்கள் கண்ஷிராம்/மாயாவதி தலைமையில் வலுவான சக்தியாக மாறினர். இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் கட்சியான பா.ஜ.க கூட கல்யாண் சிங், வகேலா, உமாபாரதி போன்ற பிற்படுத்தப்பட்டோரை மாநிலத் தலைமைகளாக முன்னிறுத்தவேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. (பின்னர் இவர்கள் அனைவரும் "கட்சிக் கட்டுப்பாட்டை" மீறிச் செயல்பட்டதால் வெளியேற்றப்பட்டது வேறு கதை.)

இந்த போக்கை அப்படியே தொடர விடுவதற்கு ஆதிக்க சாதியினர் தயாராக இருக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட / தலித் மக்கள் தங்கள் சமூகங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, தங்கள் எண்ணிக்கை பலத்தைப் பயன்படுத்தி சமூக நீதிக்கான திட்டங்களுடன் வலுவான அரசியல் சக்திகளாக மாறுவதை தடுக்கும் நோக்கில் சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:

1. சிறுபான்மை மதத்தினரை ஆபத்தான எதிரிகளாகச் சித்தரிப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களைத் தங்கள் சாதி அடையாளங்களை கைவிட வைத்து மதரீதியாக - 'உயர்'சாதித் தலைமையின் கீழ் - ஒன்றுகூட வைப்பது. ஒரு தலித்தின் வீட்டில் கல்யாணம் செய்வதற்கோ கறிச்சோறு உண்பதற்கோ தயாராக இல்லாத நிலையிலும் "நாம் அனைவரும் ஒன்று" என்ற பிரச்சாரம் மேற்கொள்வது இதன் ஒரு அங்கம். ஆனால் வெறும் கோஷங்களினால் மக்களை மதரீதியாக ஒருங்கிணைக்க முடியாது. அதற்கு நிறைய உயிர்பலி கொடுத்தாகவேண்டும். மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்த 1990-ல் முடிவுசெய்யப்பட்ட பின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவில் மிக மோசமான மத வன்முறைகள் (ரதயாத்திரை - மசூதி இடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்தக் கலவரங்கள் - மும்பை குண்டுவெடிப்புகள்) நிகழ்ந்தது தற்செயலானது அல்ல. ஒவ்வொருக் கலவரத்துக்கு பிறகும் மக்களின் மத அடையாளம் முன்னிலும் தீவிரமாகிறது. 1982-ல் குமரி மாவட்டத்திலும், 1998-ல் கோவையிலும் நடந்த மத கலவரங்களுக்குப் பின் வந்த தேர்தலில் அதுவரை சாதி அடிப்படையில் பிரிந்திருந்த ஓட்டுகள் மதரீதியாகப் பிரிந்ததும் பா.ஜ.க வேட்பாளர்கள் முதன்முறையாக அப்பகுதிகளில் வெற்றிப்பெற்றதும் அண்மைய வரலாறு.

2. ஆதிக்க சாதியினருக்கு எதிராகத் தங்கள் சமூகத்தினரை அரசியல் ரீதியாக ஒன்று திரட்டுவதில் குறிப்பிடத்தக்க வெற்றிப் பெற்ற பிற்படுத்தப்பட்ட / தலித் தலைவர்களைப் (எ.கா: லாலு, முலாயம், மாயாவதி, ராமதாஸ்) பற்றிய மிகக் கேவலமான பிம்பத்தை ஊடகங்கள் மூலம் கட்டியெழுப்புவது. எப்படி எண்பதுகளில் அனைத்து தமிழ் ஊடகங்களும் ராமதாஸை மிகவும் அருவருக்கத்தக்க ஒரு சாதி வெறியராகச் சித்தரித்தனவோ, அதே போல் தொண்ணூறுகளில் லாலுவையும் மற்றவர்களையும் வட இந்திய ஊடகங்கள் நடத்தின. மேட்டுக்குடிக் பையன்கள் லாலுவை அடிமுட்டாளாகச் சித்தரிக்கும் "லாலு ஜோக்குகளை" (வெயிட் ப்ளீஸ் என்றுச் சொல்லும் விமானப் பணிப்பெண்ணிடம் லாலு 69 கிலோ என்றுச் சொல்லிவிட்டு நிற்காமல் போய்விடுகிறார். ஹஹ்ஹஹ்ஹா..) சகலருக்கும் மின்னஞ்சல் செய்து தங்கள் சமூகக் கடமையை நிறைவேற்றினார்கள். இன்று லாலுவைப் பற்றிய பிம்பம் மெல்ல மாறத் தொடங்குகிறது. (இந்திய ரயில்வே லாலுவின் தலைமையின் கீழ் குறிப்பிடத்தக்க, மறுக்கமுடியாத முன்னேற்றம் அடைந்து வருவது இன்று பலராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது.)

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களைப் பற்றிய இத்தகைய இழிவான பிம்பங்கள் அவர்களது ஊழல், வன்முறை, திறமையின்மை மற்றும் சுயமுரண்கள் காரணமாகவே உருவாவதாக ஒருத் தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன. உண்மையில் அவர்களின் சமுக நீதி அரசியல் காரணமாக மட்டுமே அவர்கள் மீது சேறு பூசப்படுகிறது. இதற்கு ஆதாரம் வேண்டுவோர் வி.பி.சிங்கை பற்றி 1989-ம் ஆண்டு நிலவிய ஊடகப் பிம்பத்தையும் 1990-ம் ஆண்டு மண்டல் பரிந்துரைகள் அமலாக்கத்துக்குப் பிறகு உருவாக்கப்பட்ட பிம்பத்தையும் ஒப்பிட்டு நோக்க வேண்டும். இந்திய அரசியலை உய்விக்க வந்த மெசியாவாக "மிஸ்டர் க்ளீன்" என்றப் பட்டப் பெயருடன் கொண்டாடப்பட்ட அவருக்கு ஓராண்டு கழித்து ஒட்டுக்காக சாதி அரசியல் செய்யும் மலிவான அரசியல்வாதி என்ற முத்திரையையும் மிக மோசமான வசைகளையும் ஊடகங்கள் வழங்கின. அந்நாளைய நாளேடுகளைப் படிக்கும் ஒரு வெளிநாட்டவர் வி.பி.சிங் பிரதமராவதற்கு முன்னர் இந்தியா சாதிபேதங்கள் ஏதும் இன்றி சமத்துவபுரமாகத் திகழ்ந்தது என்ற முடிவுக்கு வரக்கூடும். (உ.பி-யிலோ பிகாரிலோ சில வருடங்களேனும் வாழ்ந்த ஒருவரால் தான் இதில் உள்ள அயோக்கியத்தனத்தை முழுவதுமாக உணரமுடியும். தென்னிந்தியாவைப் போலல்லாது அங்கே உயர்கல்வியிலோ, அரசு உயர்பதவிகளிலோ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அறவே பங்கில்லாமல் இருந்தது.)

3. பொதுவில் நடைபெறும் சமூக / அரசியல் விவாதங்களில் சாதியுடன் தொடர்புடைய பிரச்சனைகளைப் பேசுவது படித்தவர்களும் நாகரிகமானவர்களும் செய்யத்தகாதக் காரியம் என்றத் தோற்றத்தை ஏற்படுத்துவது. இதில் உள்ள மோசடி என்னவென்றால் "இந்தக் காலத்தில யாரு சார் கேஸ்ட் எல்லாம் பாக்கிறாங்க?" என்று இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வோரில் பெரும்பாலானவர்கள் தனி வாழ்வில் சாதி அமைப்பின் பாதுகாவலர்களாக விளங்குபவர்கள். தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் கலப்புத் திருமணம் போன்றவற்றை எதிர்த்து குலசங்கமம் ஏற்படாமல் பார்த்துக்கொள்பவர்கள்.

4. மேலே உள்ளவற்றை எல்லாம் விட பலமான ஒரு ஆயுதம் இருக்கிறது. அது அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்களின் தனி அடையாளங்களை அழித்து ஆதிக்கம் செலுத்துவோரின் அடையாளங்களை - பொது அடையாளங்கள் என்ற பேரில் - அவர்கள் மீதுத் திணிப்பது. இந்த யுத்தி எப்படி வேலை செய்கிறது? சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

*****

உரிமைப் போராட்டங்களில் அடையாளங்கள் மிகவும் முக்கியம். உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கும் உரிமைகளை மறுக்கும் ஆதிக்கச் சக்திகளுக்கும் இடையே தெளிவான, வேறுபட்ட அடையாளங்கள் இருத்தல் போராட்டத்தின் வெற்றிக்கு அவசியம்.

இதை சரியாகப் புரிந்துக்கொண்ட உரிமைப் போராட்டத் தலைவர்களில் காந்தி முக்கியமானவர். பாரிஸ்டர் காந்தி தன் ஆங்கில பாணி நடை உடை பாவனைகளை எல்லாம் துறந்து அரை வேட்டி, பஜனைப் பாடல்கள் பாடுதல் போன்ற இந்திய அடையாளங்களை ஏற்காமல் இருந்திருந்தால் அவரது போராட்டம் இந்த அளவு வெற்றிப் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. மேலும் தன்னைப் பின்பற்றுபவர்கள் ஆங்கிலப் பாணி உடைகளை புறக்கணித்து இந்திய கதர் உடைகளை அணியவேண்டும் என்பது போன்ற பல விதிகளை அவர் வலியுறுத்தியது கவனிக்கத்தக்கது.

இன்னும் சற்று பொருத்தமான ஒரு எடுத்துக்காட்டாக அமெரிக்க கறுப்பினத்தவரின் உரிமைப் போராட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். பல நூற்றாண்டு அடிமை வாழ்வின் காரணமாக கறுப்பர்கள் தங்கள் மரபையும் கலாச்சாரத்தையும் முற்றாக இழந்திருந்த நிலையிலும் உரிமைப் போராட்டம் தீவிரமாக நடந்த காலத்தில் மால்கம் எக்ஸ் போன்றவர்களின் தாக்கத்தால் வெள்ளையர்களின் கலாச்சாரத்தையும், அடையாளங்களையும், மதத்தையும் நிராகரித்து கறுப்பர்களுக்கானத் தனி அடையாளங்களை உருவாக்கும் போக்கு உருவானது. அமெரிக்கப் பொது மரபாக முன்வைக்கப்பட்ட ஆங்கிலோ-சாக்ஸன் மரபை நிராகரித்து தங்கள் ஆப்பிரிக்க மரபுடன் தொடர்புடைய சின்னங்களை கறுப்பர்கள் முன்னிறுத்தினார்கள். ஆப்பிரிக்க அறுவடை பண்டிகைகளின் சாயல் கொண்ட க்வான்ஸா பண்டிகை கிருஸ்துமஸுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டதை இங்கே சுட்டலாம்.

இன்றும் கூட மைக்கேல் ஜாக்ஸன் போன்ற சில விநோத நபர்களைத் தவிர்த்து பெரும்பாலான கறுப்பர்கள் வெள்ளையர்களாக மாறும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. தங்களுக்கென்று தனி பேச்சு வழக்கு, இசை, விளையாட்டுக்கள் என்று தனி அடையாளங்களுடன் வாழ்கின்றனர். அமெரிக்க அதிகார அமைப்பு எதிர் கலாச்சாரம் பேசிய மால்கம் எக்ஸ் போன்றவர்களை நிராகரித்து, வெள்ளையர்களின் கலாச்சாரத்தையும் மதத்தையும் ஏற்று செயல்பட்ட கிருஸ்தவ மதப் போதகர் மார்ட்டின் லூதர் கிங்கை கறுப்பர்களின் தலைவராக அங்கீகரித்தது. (இந்தியாவிலும் ஆதிக்க சாதியினரின் மரபையும் கலாச்சாரத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு எதைக் குறித்தும் எதிர் நிலைபாடு எடுக்காத ஸ்ரீ நாராயண குரு போன்றோர் காட்டிய வழியிலேயே ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி மரபையும் கலாச்சாரத்தையும் நிராகரித்த பெரியார் போன்றவர்களை கடுமையாகத் தாக்கியும் வலதுசாரி சிந்தனையாளர்கள் தொடர்ந்து எழுதிவருவது இங்கே குறிப்பிடத்தக்கது.)

தனி அடையாளங்கள் மற்றும் எதிர் கலாச்சாரம் குறித்து இந்திய மேட்டுக்குடியினரிடையே இருக்கும் புரிதல் மற்றும் அச்சம் காரணமாகவே தங்கள் கலாச்சாரத்தை சமூக ரீதியாக பின்தங்கிய மக்கள் நகலெடுப்பதை ஊக்குவிக்கின்றனர். இதில் மற்றுமொரு துன்பியல் நிகழ்வு என்னவென்றால் மேட்டுக்குடி கலாச்சாரத்தையும் ரசனைகளையும் நகலெடுப்போர் அதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அவர்களது அரசியலையும் ஏற்றுக்கொள்கிறார்கள். மிகவும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த என் நண்பர்கள் பலர் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு முன்னேற்றம் கண்ட பின் சமூக நீதிக்கு எதிரான தீவிர வலதுசாரி கருத்துக்களைக் கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். தகுதி, திறமை, தேசநலன் பற்றியெல்லாம் அவர்கள் பேசும்போது துக்ளக் கட்டுரைகளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார்களா என்ற சந்தேகம் சிலநேரங்களில் ஏற்படுவதுண்டு. தன் சமூகத்தில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்காத சூழலும், கல்வி வாய்ப்புகளும், கணினி குமாஸ்தா உத்தியோகமும் தனக்குக் கிடைத்துவிட்டது என்பதனால் அநீதியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பின் தீவிர விசுவாசிகளாக மாறிவிடுகின்றனர். (இதை காண்டலீஸா சிண்ட்ரோம் அல்லது காலின் பவல் சிண்ட்ரோம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றுத் தோன்றுகிறது.)

இந்தப் போக்கை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்திய அதிகார அமைப்பு மற்றும் ஊடகங்களின் பல்வேறு செயல்பாடுகள் அமைந்துள்ளன. பின்தங்கிய சமூகங்களில் பிறந்திருந்தாலும் அந்த சமூகங்களுடன் தாங்கள் அடையாளப்படுத்தப்படுவதை அறவே விரும்பாத, அந்த சமூகங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து எவ்வித எதிர்ப்பையோ கவலையையோ வெளிப்படுத்தாத, அதே நேரத்தில் மேட்டுக்குடி கலாச்சாரத்தையும் அரசியலையும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டவர்கள் (எ.கா: அப்துல் கலாம், இளையராஜா) விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட புனிதப் பசுக்களாக சித்தரிக்கப்படுவது இதன் ஒரு அங்கம். உடன் பணிபுரிந்த நண்பர்களால் கலாம் அய்யர் என்று அழைக்கப்படும் அளவிற்கு கலாச்சார ரீதியாகத் தன்னை மாற்றிக்கொண்ட அப்துல் கலாம் மீது பொது விவாதங்களில் ஒரு சிறு விமரிசனம் வைக்கப்பட்டால் கூட அதற்கு ஆகக் கடுமையான எதிர்வினைகள் வழக்கமாக இஸ்லாமியர்கள் மீது அதீதக் காழ்ப்பை வெளிப்படுத்தும் வலதுசாரிகளிடமிருந்தே எழுவது ஒருவித நகைமுரண். ஒரு இஸ்லாமியர் / தலித் எப்படி இருக்கவேண்டும் என்று ஆதிக்க சக்திகள் விரும்புகின்றனவோ அதற்கு பல படிகள் மேலே அப்துல் கலாமும் இளையராஜாவும் இருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபக்கம் நடந்துக்கொண்டிருக்க இந்தப் போக்குக்கு ஒரு சித்தாந்த அடித்தளம் அமைத்துத் தரும் பணியில் வலதுசாரி அறிவுஜீவிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். முகத்திலறையும் யதார்த்தத்தைப் பொருட்படுத்தாமல் பேதங்களும் ஏற்றத்தாழ்வுகளும் பிறப்பின் அடிப்படையில் அல்ல மாறாக குண கர்ம அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டவை என்றக் கருத்தை வலியுறுத்துதல் இதன் ஒரு அங்கம். ஆனால் தங்கள் அரசியல் கட்டாயங்களுக்காக "குண கர்ம விபாகச" என்ற வரிக்கு இன்று இவர்கள் அளிக்கும் பொழிப்புரையை இவர்களது சகபயணிகள் பலரால் தெய்வமாக மதிக்கப்படும் ஒருப் பெரியவர் துவைத்து தொங்கப்போடுவதை
இங்கே பார்க்கலாம். மேற்படி பெரியவர் காந்தியிடமிருந்து எடுத்து இட்டிருக்கும் ஒரு மேற்கோள் 1947-க்கு முன்னால் இந்த வரிக்கு என்னப் பொருள் நிலவியது என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாக்குகிறது.

கலாச்சார நகலெடுப்பின் விளைவுகள் பற்றிய ஒரு தெளிவான புரிதல் மெக்காலேக்கு 1835-யிலேயே இருந்திருக்கிறது. அதனால் தான் இரத்தத்தாலும் நிறத்தாலும் மட்டும் இந்தியர்களாவும் சிந்தனை, கருத்துக்கள், மொழி, ரசனைகள் ஆகியவற்றால் - குண கர்ம அடிப்படையில் - ஆங்கிலேயர்களாகவும் இருக்கும் பழுப்புத் துரைகளை உருவாக்கப் பரிந்துரைத்தார். ஆனால் இந்த பழுப்புத் துரைகள் தங்கள் பாசாங்குகளில் தாங்களே ஏமாந்து வெள்ளையர்களுக்கு மட்டுமே உரிமை உள்ள ரயில் பெட்டிகளிலோ, மற்ற உள் வட்டங்களிலோ அதிகார மையங்களிலோ நுழைய முயன்றால் தூக்கி வெளியே வீசப்படுவார்கள் என்பது மெக்காலேக்கு தெரியும். நவீன மெக்காலேக்களுக்கும் தெரியும்.

பி.கு: எழுதி முடித்தப் பிறகு தான் நீளத்தைக் கவனித்தேன். வெட்டிச் சுருக்க மனமில்லை. சுருக்கமாக எழுதுமாறு கேட்டுக்கொண்ட நண்பர்கள் நாய் வாலை நிமிர்த்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கக்கூடும். அவர்களுக்கு என் வருத்தங்கள்.

39 மறுமொழிகள்:

இப்பொழுதுதான் முதல் முறையாக உங்கள் பதிவை தமிழ் மணத்தில் பார்த்துப் படிக்க ஆரம்பித்தேன்.

இரண்டு 'மெக்காலே' இடுகைகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். என் சிந்தனையோட்டத்தைப் பெருமளவில் ஒத்திருந்த இடுகைகள். உங்களது மற்றைய இடுகைகளையும் விரைவில் படித்து விடுகிறேன்.

//அமெரிக்க அதிகார அமைப்பு எதிர் கலாச்சாரம் பேசிய மால்கம் எக்ஸ் போன்றவர்களை நிராகரித்து, வெள்ளையர்களின் கலாச்சாரத்தையும் மதத்தையும் ஏற்று செயல்பட்ட கிருஸ்தவ மதப் போதகர் மார்ட்டின் லூதர் கிங்கை கறுப்பர்களின் தலைவராக அங்கீகரித்தது. (இந்தியாவிலும் ஆதிக்க சாதியினரின் மரபையும் கலாச்சாரத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு எதைக் குறித்தும் எதிர் நிலைபாடு எடுக்காத ஸ்ரீ நாராயண குரு போன்றோர் காட்டிய வழியிலேயே ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி மரபையும் கலாச்சாரத்தையும் நிராகரித்த பெரியார் போன்றவர்களை கடுமையாகத் தாக்கியும் வலதுசாரி சிந்தனையாளர்கள் தொடர்ந்து எழுதிவருவது இங்கே குறிப்பிடத்தக்கது.)//

மிகச்சரியான அவதானிப்பு. தொடர்ந்து எழுதுங்கள்!

நன்றி - சொ. சங்கரபாண்டி

இந்தப்பதிவை எப்போது போடுவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். முற்றிலும் சமூக ரீதியான பார்வையிலேயே இந்தப்பதிவை எழுதியிருக்கிறீர்கள். சமஸ்கிருதமயமாதலுக்கு ஒரு பொருளதார அடிப்படையும் உண்டு. உதாரணம் அட்சயதிருதியை. இது நுகர்வோர் கலாச்சாரம் மற்றும் 'நகலெடுப்பின்' கூட்டணியால் பிரபலமான பண்டிகை.

இதே நுகர்வோர் கலாச்சாரம் தான் சமஸ்கிருதமயமாதல் அதிவேகமாக நிகழ ஒரு ஊக்கியாக இருக்கிறது.
ஒரு பொருளை இந்தியா போன்ற வேற்றுமை மிகுந்த நாட்டில் விற்பது கடினம். அமெரிக்காவில் பெப்ஸியய் விற்க ப்ரிட்னி ஸ்பியற்ஸ் ஒருவர் போதும் , இந்தியாவில் மாதவன் முதல் அமிதாப் பச்சன் வரை ஒரு டஜன் மொழி நடிகர்களாவது மெனக்கெட வேண்டும். இதை தவிர்க்க இந்தியர் அனைவரையும் ஒரு அடித்தளத்தில் கொண்டு வந்துவிட்டால், மார்கெட்டிங்க் செலவு குறையுமில்லையா? அதற்கு கைகொடுப்பது ஏற்கனவே நடந்து வரும் சம்ஸ்கிருதமயமாதல்.

இந்தியாவிலும் ஆதிக்க சாதியினரின் மரபையும் கலாச்சாரத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு எதைக் குறித்தும் எதிர் நிலைபாடு எடுக்காத ஸ்ரீ நாராயண குரு போன்றோர்

Your ignorance is too obvious.

என் அறியாமையை சுட்டிக்காட்டிய அனானி நண்பருக்காக நாராயண குருவைத் தன் ஆன்மீக குருவாகக் கொண்டு, நாராயண குருகுலத்தில் பல ஆண்டுகளைக் கழித்த ஜெயமோகன் எழுதியதைக் கீழே தருகிறேன்.
----
"நாராயண குருவின் அணுகுமுறை மிக மிக நேரிடையானது . எதிர்மறை மனநிலைக்கு அதில் சற்றும் இடமில்லை. எண்பது வயது வரை வாழ்ந்த அவர், மிகக் கொந்தளிப்பான பல சூழல்களை சந்தித்த அவர், தன் வாழ்நாள் முழுக்க எதைப்பற்றியும் எதிர்மறையாக எதுவுமே சொன்னதில்லை . எவரையுமே கண்டித்ததில்லை . நாயர்கள் தங்களைத் தீண்டப்படாதவர்களாக நடத்துகிறார்கள் என்று குமுறிய ஈழவ இளைஞர்களிடம் அதை தடுக்க ஒரே வழி புலையர்களை நாம் அணைத்து சேர்த்துக் கொள்வதே என்று அவர் உபதேசித்தார். இது குருவின் போக்கு என்ன என்பதை காட்டும் உதாரண சம்பவமாகும்."

"...குலதெய்வங்களை இல்லாமல்செய்ததில் நாராயணகுருவிற்கு இன்னொரு நோக்கமும் இருந்திருக்கலாம். குலதெய்வங்கள் என்பவை ஒருவகையில் குலச்சின்னங்கள். அவை பழைமையை பிரதிநிதித்துவம் செய்பவை. ஈழவர்களின் பிற்பட்ட வாழ்க்கைமுறையும் உலகநோக்கும் அவற்றிலும் ஊடுருவி இருந்தன. உதாரணமாக கள் , மாமிசம் ஆகியவற்றை படைத்து உண்டு குடித்து களிப்பதே இவ்வழிபாட்டின் முக்கியமான கூறு. இதன்மூலம் உருவாகும் பூசல்கள் வழிபாட்டின் பகுதியாக கணிக்கபப்ட்டன. இதனாலேயே பெண்களும் குழந்தைகளும் இவற்றில் பங்குகொள்வதுமில்லை. சிறுதெய்வங்களை அகற்றி பெருந்தெய்வங்களை பதிட்டை செய்ததுவழியாக நாராயணகுரு அடிப்படைக் குறியீடுகளை மாற்றியமைக்கிறார். வன்முறைமேலோங்கிய பலிகொள்ளும் தெய்வங்களின் இடத்தில் கல்விக்கடவுள் சரஸ்வதி வருவது முக்கியமான மாற்றமே. குடிகளியாட்டம் ஆகியவற்றாலான வழிபாட்டுக்குப் பதிலாக பிரார்த்தனையும் அறிவார்ந்த தத்துவ விவாதங்களும் கொண்ட வழிபாட்டு முறை உருவானது."

"...தாழ்த்தபப்ட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அறிவார்ந்த தளங்களில் செயல்படும் முக்கியமானவர்கள் சம்ஸ்கிருத ஞானம் அடையவேண்டும் என்று எண்ணினார். சம்ஸ்கிருத ஞானம் என்னும்போது குரு உத்தேசித்தது மதநூல்களிலும் தர்மநூல்களிலும் பெறும் ஆழமான பயிற்சியையையே. காரணம் இந்திய சமூகத்தில் சம்ஸ்கிருதத்துக்கு உள்ள இடம் குறித்த தெளிவான ஒரு புரிதல் அவருக்கு இருந்தது. மதஞானமும் தர்மஞானமும் சம்ஸ்கிருதத்தில் அமைந்ததும் சம்ஸ்கிருதம் பாரதம் முழுமைக்குமான பொது ஊடகமாக அமைந்ததும் நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட நிகழ்வுகள். ஆகவே சம்ஸ்கிருதத்தை மறுப்பது வரலாற்றை மறுப்பதுதான். நாராயணகுருவின் வழிமுறை எதிர்ப்பதும் புறக்கணிப்பதும் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லவேண்டும்."

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20404291&format=html

Jayamohan states what is convenient to him.You state what
is to your liking.But Guru was a
revolutionary who empowered Ezhavas.His form of protest was
different from that of Periyar.
Periyar would negate God, Guru would build temples to bring in
a sense of unity and identity.
Periyar rejected Sanskrit, Guru
ensured that Sanskrit was used to
empower and enlighten Ezhavas.
He did oppose in his own way,
in his own style.You are unable
to appreciate it.

/*Jayamohan states what is convenient to him.*/

May be.

/* You state what is to your liking */

I was only presenting the position of right-wing intellectuals like Jayamohan. That can be done only on the basis of what they have publicly stated, be it convenient or inconvenient to them.

சங்கரபாண்டி,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கு மட்டுமல்ல தமிழ் இணையத்தின் நெடுநாளைய உறுப்பினர்கள் பலருக்கும் என் பதிவு இப்போது தான் அறிமுகமாகி வருகிறது. எழுதத் தொடங்கியபின் நான்கைந்து மாதங்களுக்கு தமிழ்மணத்தின் மறுமொழி நிலவர சேவையைப் பயன்படுத்திக் கொள்ளாததால் பதிவுகளைச் சேர்த்த வேகத்திலேயே காணாமல் போய்விடும். நான் எழுதுவது நேரம் செலவிட்டு படிக்கத் தகுந்ததாக இருக்கிறது என்று பலரும் நம்பிக்கை அளித்த பிறகே என் பதிவு "அண்மைய மறுமொழிகள்" பகுதியில் வருமாறு செய்தேன். இப்போது அதிகமானவர்கள் படிப்பதாகத் தெரிகிறது. நன்கு அறியப்பட்ட பதிவர்களான மதி கந்தசாமி, பாஸ்டன் பாலா போன்றோர் என் பதிவை சிறந்தப் பதிவுகளில் ஒன்றாகப் பட்டியலிட்டதும் காரணமாக இருக்கக்கூடும். அவர்களுக்கு என் நன்றி.

பத்மகிஷோர்,

பொருளாதாரம் எனக்கு அவ்வளவாக புரிவதில்லை. ஆனால் பொதுவாக சமூக மாற்றங்களின் பின்னால் வலுவான பொருளாதார காரணங்கள் உண்டு என்ற புரிதல் உண்டு. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

****

நேற்று இந்த இடுகையை இட்ட பிறகு தான் ஹிண்டுவில்தலைப்புச் செய்தியைப் பார்த்தேன். கருணாநிதியிடமும், லாலுவிடமும், காம்ரேடுகளிடமும் தன் சிண்டைக் கொடுத்திருக்கும் இன்றைய மத்திய அரசு வேறு வழியில்லாமல் மேற்கொள்ளும் சமூக நீதிக்கான நடவடிக்கைகளை முறியடித்து ஆதிக்க சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பதில் உச்ச நீதிமன்றம் அண்மைக்காலமாக காட்டிவரும் வேகம் கவலை அளிக்கிறது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத, யாராலும் விமரிசிக்க முடியாத (மீறி விமரிசித்த அருந்ததி ராய் போன்றவர்களை சிறையில் அடைக்கத் தயங்காத) ஒன்பது நீதிபதிகள் ஆய்வு செய்து தங்களுக்கு ஒவ்வாததை நிராகரிக்கலாம் என்றால் பின் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பீற்றுவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்? வேதனை என்னவென்றால் வட இந்திய சாதிப் பெயர்கள் குறித்து எனக்கு இருக்கும் பரிச்சயத்தின் அடிப்படையிலும் மற்ற தகவல்களின் அடிப்படையிலும் இந்த ஒன்பது பேரில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவரோ தலித்தோ இல்லை என்று தெரிகிறது. தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் இருபத்திரண்டு பேரில் ஒருவர் இஸ்லாமியர். பெண்கள் எவரும் இல்லை. இந்தியாவில் இருப்பதிலேயே ஆகப் பெரிய புனிதப் பசுவாக உச்ச நீதிமன்றம் இருப்பது எதிர்பார்க்கத்தக்கதே.

அமெரிக்க ஜனநாயகத்தில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தாலும் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் அவர்கள் கடைபிடிக்கும் நடைமுறை பின்பற்றத்தக்கது. ஓருவர் நியமிக்கப்படும் போது அவரது பின்னணி, கடந்த காலங்களில் முக்கியமான பிரச்சனைகளில் என்ன நிலைபாடுகள் எடுத்தார்கள், முன்னர் நீதிபதியாக பணியாற்றியபோது வழங்கியத் தீர்ப்புகள் என்று அனைத்தும் அலசி ஆராயப்பட்ட பின்பே செனட் அவர்களது நியமனத்தை அங்கீகரிக்கவோ நிராகரிக்கவோ செய்கிறது.

57 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு தலித் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வர இருக்கிறார். ஏதாவது மாற்றங்கள் வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

You have taken some 'politically correct' stands.You have found fault with the recent judgment of Supreme Court.So you will get more
than enough supporters in Tamil
Blog world.If you add some sentences that explicitly ridicule or blame brahmins you will certainly be appreciated by some
bloggers.If one goes by your logic
if tomorrow the Parliament enacts
a law that provides for 100% reservation for SC,ST and OBC
that should not be questioned by
Supreme Court.Just a remainder- during emergency the lok sabha
endorsed the acts brought in by
Mrs.Gandhi's government.And if BJP
comes to power with brutal majority and decides to build
Ram temple or deprives rights to
minorities will you support it.
It is not 'politically correct'
to ask such questions now because
the politically correct position
link caste of the judge with judgments.

In USA Bush can make a conservative and right wing
person as a Supreme Court if his
party stands by him and if it has
majority in congress and senate.
In India judges are not appointed
in that way.If one goes by one
logic whatever the majority
of the elected representatives
approve should not be questioned
by Courts.Bush got the approval
of the elected representatives
for invading iraq and for other actions.So you should
take a position that US Supreme
Court should not go in to human
rights violations done by USA in
the name of war against terror.
Will you.
Anyway dont bother about logic
or coherency in your arguments.
Sankarapandis will support you
as you long as you take
some 'politically correct'
pro-OBC positions.

/* In USA Bush can make a conservative and right wing person as a Supreme Court if his party stands by him and if it has majority in congress and senate.*/

You really think so? Then why he couldn’t make Harriet Miers a Supreme Court judge? At that time his party did have a majority in the Congress and the Senate and she fitted your description of a “conservative and right wing person” with her anti-abortion stand and opposition to the repeal of sodomy laws besides being an evangelical Christian. It was plain that the public opinion was against her.

/* Bush got the approval of the elected representatives for invading iraq and for other actions. So you should take a position that US Supreme Court should not go in to human
rights violations done by USA in the name of war against terror. Will you. */


Couldn’t resist this as you talk of logic and coherency. Did Bush get the approval of the elected representatives for committing human rights violations?

/* If one goes by your logic if tomorrow the Parliament enacts a law that provides for 100% reservation for SC,ST and OBC that should not be questioned by Supreme Court. */

Parliament members are answerable to the people who elected them. But to whom are the Supreme Court judges answerable? Who can censure them? You want unquestionable authority to reside in the hands of a few elite unelected men in whose good intentions we masses have to blindly trust? I thought in a democracy, the will of the people is supreme. You appear to suggest that the will of the judges should be supreme.

/* Just a remainder- during emergency the lok sabha endorsed the acts brought in by Mrs.Gandhi's government. */

Yes. That’s why those Lok sabha members, including Mrs. Gandhi, were thrown out in the elections that followed.

By the way, thanks for recommending my blog in your Gilli column.

//Sankarapandis will support you
as you long as you take
some 'politically correct'
pro-OBC positions.//

This is my response to Ravi Srinivas's above comment and it is not much related to this post. Jagat may choose to delete this.

I have seen Ravi Srinivas writing about such one-line comments about me in few other places including some English blog as well. Although there is nothing offensive in his comment, it may mislead unknown readers.

I stopped discussing with Ravi since May 2006 when he openly identified himself and argued like a Brahmin Sangam member. I did not expect anything rational to come from him on caste related issues.

I just wanted to clarify that my stand on reservation issue is not just pro-OBC as Ravi Srinivas trying to trivialize in many places. In stead he can call it as "pro-social-justice".

In fact, I am neither from the obc nor I now like to associate me with any caste. Until I went to IITM for graduate studies, I was against caste-based reservation and campaigned against it during my under-graduate days, because I was from a poor upper caste family who had very little advantage for studying.

My stay in IITM was kind of an eye-opener when I was able to understand the hegemony of the minority castes over the majority castes. That is when I realized how myopic I was when I was criticizing caste-based-reservation purely on my selfish or personal caste-oriented approach. Since then I strongly feel that until we attain diversity and social justice in IITs, IIMs and AIIMS, I must support case-based reservation there without applying the creamy layer concept.

Hence stop parroting that I am pro-OBC and instead call me as pro-diversity and pro-social-justice. That would be more politically correct!

Thanks – S. Sankarapandi

பொதுவாக தமிழ் நாளிதழ்களில் இறைந்துக் கிடக்கும் தகவல் பிழைகள் அளவுக்கு 'தி ஹிந்து'வில் இருக்காது என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனால் நான் சுட்டி அளித்திருந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிய செய்தியில் இப்படி இருக்கிறது.

"In a significant judgment, a nine-judge Bench of the Supreme Court on Thursday held that there could not be any blanket immunity from judicial review of laws inserted in the Ninth Schedule of the Constitution... Chief Justice Y.K. Sabharwal and Justices Ashok Bhan, Arijit Pasayat, B.P. Singh, S.H. Kapadia, C.K. Thakker, P.K. Balasubramanyan, Altamas Kabir and D.K. Jain examined the validity of inclusion of several Central and State laws, including the Tamil Nadu Reservation Act providing for 69 per cent quota in jobs and in educational institutions."

மற்ற ஊடகங்களும் இதே பெயர்களைத் தான் குறிப்பிட்டிருந்தன. இன்று நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றதைப் பற்றிய முதல் பக்க செய்தியில் அவரைப் பற்றி இப்படி இருக்கிறது.

"Last week, he was part of a nine-judge Bench that ruled that all laws inserted in the Ninth Schedule of the Constitution would be subject to judicial review if they violated the Basic Structure of the Constitution and infringed on the fundamental rights of citizens."

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் குழுவில் ஒரு தலித் நீதிபதி இருந்தார் என்ற தவறான தகவல் இவ்வளவு முக்கியமான முதல் பக்க செய்தியில் எப்படி இடம்பெற்றது என்று தெரியவில்லை. அறியாமல் நடந்திருந்தால் நாளை முதல் பக்கத்திலேயே திருத்தம் வெளியிடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்த வாக்கியத்திலேயே இன்னொரு தகவல் பிழை: "..all laws inserted in the Ninth Schedule of the Constitution would be subject to judicial review.." என்று இருப்பது சரியல்ல. முந்தைய செய்தியில் இப்படி இருக்கிறது:

"The Bench held that all such laws included in the Ninth Schedule after April 24, 1973 would be tested individually on the touchstone of violation of fundamental rights or the basic structure doctrine."

1973-க்கு முன்னால் சேர்க்கப்பட்ட சட்டங்கள் (நில உச்சவரம்பு சட்டம் போன்றவை) ஏதாவது அடிப்படை உரிமைகளை மீறி இருப்பினும் அவை மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்படாது.

***

முதல் பார்வையில் இந்த "violation of fundamental rights" முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகத் தெரியலாம். ஆனால் இதன் அடிப்படையில் எல்லாவகை இட ஒதுக்கீட்டையும் - வெறும் இரண்டு விழுக்காடாக இருந்தாலும் கூட - சட்டவிரோதமாக அறிவித்து விடலாம். (Because it can be easily interpreted that reservation violates the fundamental right to equality and non-discrimination of the forward communities.) ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள மற்ற அடிப்படை உரிமைகளான right to freedom of speech and expression, right to practise and propagate religion ஆகியவற்றை அடித்து நொறுக்கும் சட்டங்கள் கடந்தக் காலங்களில் இயற்றப்பட்டபோதெல்லாம் உச்ச நீதிமன்றம் அந்த சட்டங்களுக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்து வந்திருப்பதும் நினைவுக்கு வருகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் "basic structure doctrine" அடிப்படையில் மட்டுமே சட்டங்கள் அமையவேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் அக்கறை போற்றத்தக்கது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தில் எங்குமே குறிப்பிடப்படாத "creamy layer" என்ற ஒருக் கருத்தாக்கத்தை தாங்களாகவே உருவாக்கி அதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களில் ஒரு பகுதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது என்றும் இதே உச்ச நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியதை என்னவென்று சொல்வது? சட்ட விவகாரங்களில் நல்லப் பரிச்சயம் உள்ள ரவி ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

ஜெகத்,
மிக நீண்ட பதிவாக இருப்பினும், ஒரு மூச்சில் வாசிக்க வைத்தது உங்கள் சிறப்பான நடை, அனைத்து கருத்துக்களுடன் ஒப்புதல் இல்லாவிட்டாலும் ! பாராட்டுக்கள் !

விவாதம் செய்ய தயக்கம் / சலிப்பு, ஏனெனில், இங்கு பதிபவர்களில் (பெரும்பாலும்) எதிர்ப்பவர் கூறும் கருத்துகளில் (சிலவற்றில் சில சமயங்களில்) நியாயம் இருக்கிறது என்று ஒப்புக் கொள்பவர் மிக மிகச் சிலரே ! தாங்களே 100% சரி என்ற நிலைமையிலிருந்து பேசுவதால், விவாதத்தில் பயனும் இல்லை, மாற்றமும் ஏற்படுவதில்லை (பின்னூட்ட விவாதக்களம் வாசிக்க மிகுந்த சுவாரசியமாக இருந்தாலும்!).

இப்படிப் பேசினால், 'நடுநிலை வியாதிகள்' என்று பட்டமெல்லாம் வேறு தருவார்கள் :) எப்போது வலைப்பதிவு தொடங்கினீர்கள் ?

எ.அ.பாலா
********************************

பாலா, நன்றி. முதல் பதிவை சென்ற ஜூலை மாதமே போட்டிருந்தாலும் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று தான் இதுவரை எழுதி வந்தேன்.

அருமையான ஆழமான, அவதானித்து எழுதப்பட்ட பதிவு :)

>> தன் சமூக அடையாளங்கள் குறித்து வெட்கம் கொண்டு அவற்றை மறைத்து ஆதிக்கச் சாதியினரின் அடையாளங்களை விரும்பி அணியும் ஒருவர் தன்னுடைய சாதி இழிவானது என்றும் ஆதிக்க சாதி உயர்வானது என்றும் தன் மனதின் ஆழத்தில் ஏற்றுக்கொள்கிறார். தன் சுற்றம் மற்றும் பிள்ளைகளின் மனதிலும் இந்த எண்ணத்தை ஏற்றுகிறார். (தர்க்கத்தின் மூலம் உருவாக்கப்படாத இத்தகைய எண்ணங்களை பின்னாளில் தர்க்கத்தின் மூலம் மாற்றுவது மிகவும் கடினம்.) சாதி அமைப்பு எவ்வித சீர்திருத்தமும் இன்றித் தொடரவேண்டும் என்று விரும்புவோரின் அதிகப்பட்ச எதிர்பார்ப்பு இதுதான். >>

சரியான பார்வை - ஒழுங்கற்றவைகளாகத் தோன்றும் சில்லுகளின் மொத்தவடிவத்தினை கோர்த்து வைத்துக் காட்டித் திகைக்க வைக்கிற திறன் உங்களுக்கு வாய்த்திருக்கிறது.

தங்கமணி, சுந்தரமூர்த்தி, சுந்தரவடிவேல், 'உருப்படாதது' நாராயண், ரோ்சாவசந்த், தருமி போன்றவர்களின் வரிசையில் வைத்துப் பார்க்கும்படியான பதிவு இது! :)

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே! :)

நாப்பழக்கம் பதிவை வாசித்து, நடையின் ஒழுங்கினாலும், இலகுவான தன்மையினாலும் கவரப்பட்டு, இப்பதிவு வரை வந்தேன்.

தொடர்ந்து எழுதுங்கள். சூழலின் கோஷங்களைத் தாண்டி கவனிப்பது என்பது ஒரு அரிய விதயம். அது கைகூடி வருகையில் எழுதுவது நலம்.

ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்காக நியோவுக்கும் தங்கமணிக்கும் என் நன்றிகள்.

பின்தங்கிய சமூகங்களில் பிறந்திருந்தாலும் அந்த சமூகங்களுடன் தாங்கள் அடையாளப்படுத்தப்படுவதை அறவே விரும்பாத, அந்த சமூகங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து எவ்வித எதிர்ப்பையோ கவலையையோ வெளிப்படுத்தாத, அதே நேரத்தில் மேட்டுக்குடி கலாச்சாரத்தையும் அரசியலையும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டவர்கள் (எ.கா: அப்துல் கலாம், இளையராஜா) விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட புனிதப் பசுக்களாக சித்தரிக்கப்படுவது இதன் ஒரு அங்கம். உடன் பணிபுரிந்த நண்பர்களால் கலாம் அய்யர் என்று அழைக்கப்படும் அளவிற்கு கலாச்சார ரீதியாகத் தன்னை மாற்றிக்கொண்ட அப்துல் கலாம் மீது பொது விவாதங்களில் ஒரு சிறு விமரிசனம் வைக்கப்பட்டால் கூட அதற்கு ஆகக் கடுமையான எதிர்வினைகள் வழக்கமாக இஸ்லாமியர்கள் மீது அதீதக் காழ்ப்பை வெளிப்படுத்தும் வலதுசாரிகளிடமிருந்தே எழுவது ஒருவித நகைமுரண். ஒரு இஸ்லாமியர் / தலித் எப்படி இருக்கவேண்டும் என்று ஆதிக்க சக்திகள் விரும்புகின்றனவோ அதற்கு பல படிகள் மேலே அப்துல் கலாமும் இளையராஜாவும் இருக்கிறார்கள்.

Most Indians would laugh at this.
They rever both for what they have done.Deeds are louder than words.
Both prove that hardwork, sincerity and devotion to work
are very important and in this country one can make it to the top
irrespective of humble beginnings.
Perhaps you want everyone to shout from roof top your favorite slogans
to prove that they have social concerns.A scientists like Kalam
speaks of self-reliance and expresses social concerns is his own way.If you cant understand this
why blame him.
This inspires youth and children as his deeds demonstrate his ideas.Kalam and Rajaa are respected because they
had a broad vision and unwavering
committment. Parochial minds like you can never appreciate this.

"மெக்காலே"-க்களை படித்து முடித்தேன். உங்கள் கருத்துக்களோடு பெரும்பாலும் உடன்படவில்லை என்ற போதும், வழக்கம்போல பின்னூட்டமிடுகிறேன்.

நல்ல பதிவு. ஆழமான பார்வை.

உங்கள் பார்வை தாழ்த்தப்பட்டோரிடையே நடைபெறும் "சமஸ்கிருதமயமாக்கல்"-லுடன் நின்றிருக்க வேண்டாம். நீங்கள் கூறும் "உயர் சாதி","ஆதிக்க சாதி"-லும் இது போன்ற ஒரு தன்மையை காணலாம். அதுதான் "மேற்கை நகலெடுத்தல்". படிப்பிலிருந்து , வேலை, வாழ்க்கை முறை, ஏன் இறப்பு வரை அத்தனையும் "மேற்கு கலாச்சார"-மயமே. நீங்கள் காந்தியை குறிப்பிட்டிருந்த போதிலும், இன்றைய நிலையில் உள்ளவர்களை பற்றி நான் பேசுகிறேன்.

மேலும், உங்களுக்கு ஒரு சில அரசியல்வாதிகள் மேல் அபார நம்பிக்கை தெரிகிறது. ஒரேயொரு அறிவுரை, அவர்களை யாரையும் நம்ப வேண்டாம். மாயாவதி பிராமண இளைஞர்களுக்கு மாநாடு கூட்டுகிறார். உமாபாரதி உடுப்பி சுவாமிகளிடம் பூரண ஆசி பெற்றது நினைவிருக்கலாம். நம்மூர் ஆசாமியோ அவ்வப்போது இது பற்றி பேசுவதோடு சரி. குடும்ப நலனை பற்றிய நினைவே அவருக்கு. அவனவன் விழித்துக் கொண்டால் மட்டுமே அவனுக்கு நன்மை. அதையும் பதிவிடுங்கள்.


"தி ஹிண்டு" நாளிதழ் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பதைக் கடுமையாக எதிர்த்தது. அதன் ஆசிரியர் கஸ்தூரி ஸ்ரீனிவாசன் இவ்வாறு தலையங்கம் எழுதினார்: "பாமர மக்கள் தங்கள் அறியாமையின் காரணமாக ஏமாற்றுக்காரர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கிவிடுவார்கள். இந்த விஷப்பரீட்சையை இன்னும் சில ஆண்டுகள் தள்ளிப் போடுவதால் எந்த இழப்பும் ஏற்பட்டுவிடாது".


இதை இங்கு இருந்தவரும் பல வருடங்களுக்கு முன்பே பேசியிருப்பதை மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

முடிவாக, ஒடுக்கப்பட்டோரை காப்பாற்ற வந்ததாக கூறுவோரெல்லாம் ஒன்றும் செய்து விடப்போவதில்லை, அவர்களை இன்னும் தாழ்த்துவதை தவிர. மேலும், இந்த "நகலெடுத்தல்" எனக்கு தெரிந்தவரை யார் மீதும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. ஆயினும் இது போன்ற பதிவுகள் ஒரு சிலரை சிந்திக்க வைக்கவாவது உதவும்.

ஒரு சிலரின் நடையை பார்த்து நான் பொறாமை படுவதுண்டு, அதில் இப்போது நீங்களும் சேர்த்தி.

Probably this is The best blog post I have ever read in blog world so far.Excellent vision and observation.I hope you would continue without taking long breaks :)

ஹரி & கோபாலன்: உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. என் எழுத்து மற்றும் நடை மீதான உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் :-)

Anonymous: Thanks for your feedback. If I start debating you on Kalam and Ilayaraja, I’ll probably end up writing something as lengthy as this post itself. However, I really don’t want to get into that discussion because I know where that will lead to. In fact, I was almost tempted to write a post on these two gentlemen sometime back when there was a somewhat in-depth discussion on Ilayaraja in Rozavasanth’s blog. I believe that it is very difficult for us to discuss Indian socio-political issues without our biases. Instead, I’ll just point to an example from our neighborhood that is an extreme manifestation of the psychology of the ruling classes wanting to suppress politics of identity.

Do you know how much the late Kadirgamar was revered by the Sinhala people? He was the unquestionable hero of the Sinhala ultra nationalists much more than any other Sinhala leader. (In 2004, JVP even wanted him to be appointed as the prime minister of Sri Lanka.) If you had asked any Sinhala nationalist the reason for such adoration, he too would have mentioned lofty qualities such as broad vision and unwavering commitment. But the truth is that he was a hero to them simply because of what he was: someone who hated to be identified with the community in which he was born, someone who never once raised even a murmur of protest against the extreme oppression faced by his community, someone who was extremely loyal to the ruling establishment and someone who tried all he could to assimilate into their religion and culture.

//ஒரு இஸ்லாமியர் / தலித் எப்படி இருக்கவேண்டும் என்று ஆதிக்க சக்திகள் விரும்புகின்றனவோ அதற்கு பல படிகள் மேலே அப்துல் கலாமும் இளையராஜாவும் இருக்கிறார்கள்.//

ஜகத் குறிப்பிட்ட இந்த வாக்கியங்களைப் புரிந்து கொள்ள மறுக்கும் அனானிக்காக The Hindu குடும்பப் பத்திரிகைகளில் வந்த சில செய்தி/கட்டுரைச் சுட்டிகளை இங்கு அளிக்கிறேன்.

http://www.hinduonnet.com/fline/fl1425/14251070.htm

Kalam was something of a curiosity at Thumba. A bachelor, his spartan lifestyle as a vegetarian and teetotaller who lived in a single room in a lodge in Thiruvananthapuram earned him the nickname Kalam Iyer.

http://www.hinduonnet.com/fline/fl1913/19131240.htm

At St. Joseph's, Kalam was the secretary of the vegetarian mess: he remains to this day a strict vegetarian, a non-smoker and a teetotaller.

But his personal staff had standing instructions to send all honoraria he received for the many lectures he delivered to a charity that he had been supporting for decades - an orphanage run by the Kanchi Kamakoti Mutt.

http://www.hindu.com/2005/05/06/stories/2005050608210100.htm
M. Nagarathinam, an expert cook, popularly known as `Murugan' at the ISRO guest house in Chennai, went to SHAR to prepare a meal featuring especially "vatha kozhambu" relished by the President. "Mr. Kalam is a pure vegetarian and he likes avial, vatha kozhambu, and mor kozhambu," is SHAR intelligence.


http://www.hinduonnet.com/mag/2002/07/07/stories/2002070700170300.htm
And we like him, above all, because he is a "good" Muslim, or as the Vishwa Hindu Parishad (VHP) secretary told us, an example of a Muslim who is a "diehard nationalist". As we have been told ad nauseam — he plays the veena, can recite from the Bhagvad Gita and is a vegetarian as well.

இவை மிகச் சில உதாரணங்களே.
கலாம் ஐயர் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதைப் பற்றியும், பகவத் கீதையைப் படிப்பதையும் இது வரை பல முறைகள் இந்துப் பத்திரிகை வெளியிட்டுப் புளகாங்கிதம் அடைவதைப் படித்திருக்கிறேன். தன்னை ஒரு கம்யூனிஸ்டு என சித்தரிக்க முயலும் என்.இராம் ஆசிரியராக இருக்கும் பத்திரிகை அளிக்கும் அப்துல் கலாம் இந்துமயமாக்கல்/சமஸ்கிருதமயமாக்கல் விளம்பரங்கள். மற்றபடி ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து மதவாத அமைப்புகள் அப்துல் கலாமைப் பற்றிச் சொல்லி வருவதை நிறைய அள்ளலாம். எடுத்துக்காட்டாக ஒரு சுட்டி இங்கே:

http://www.rediff.com/news/2002/aug/27prez.htm
According to the RSS, the Indian President is a Hindu because he treats his country 'like his mother', is a patriot from the core of his heart, reads the Bhagwad Gita, respects the statue of Nataraja (Shiva) and a vegetarian.

வேறு சில அனானிகள் இதைப் படித்துவிட்டு மற்ற இடத்தில் போய் நான் அப்துல் கலாமை அவதூறாக எழுதியதாகச் சொல்லித் திரியலாம். இளையராஜா அல்லது அப்துல் கலாம் அவர்களின் திறமையையும், பங்களிப்பையும் பெரிதும் போற்றுகிறேன். அவர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களையும், விருப்பங்களையும் மதிக்கிறேன். ஆனால் தங்களது சொந்தச் சமூக அடையாளங்களைத் துறந்து சமஸ்கிருதமயமாக்கிக் கொண்டதற்காக அவற்றைப் பற்றியே மீண்டும் மீண்டும் சொல்லி அவர்களைப் புனிதப் பசுக்களாகப் பேசித்திரிவதையும், இப்படிப் பட்ட நகலெடுப்பைப் பற்றி ஒரு உயர்வான பிம்பத்தை திட்டமிட்டு ஏற்படுத்துவதையுமே இங்கு குறிப்பிடுகிறோம்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

>> But the truth is that he was a hero to them simply because of what he was: someone who hated to be identified with the community in which he was born, someone who never once raised even a murmur of protest against the extreme oppression faced by his community, someone who was extremely loyal to the ruling establishment and someone who tried all he could to assimilate into their religion and culture. >>

jagath! You are bang on target!

The anony is our usual 'politically incorrect' blogger! ;)

அப்துல் கலாம் படிக்கின்ற காலம் தொட்டே அவ்வாறு இருக்கின்றார் என்றே அறிய இயலுகிறது. ஏதோ பதவிக்கு வந்தபின் தன்னை மாற்றிக் கொண்டது போல் தெரியவில்லையே.அவர் குரானை நிராகரித்து கீதையை உயர்த்திப் பேசவில்லையே.அவருக்கு சரி என்று தோன்றியதை செய்திருக்கிறார். ஒரு இஸ்லாமியர் என்றால் பகவத் கீதையை படிக்க கூடாது, மாமிசம் உண்ண வேண்டும், தன் மத நம்பிக்கைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் ஒரு வரையரை செய்வீர்கள். அப்புறம் அவர் அவ்வாறில்லை இன்று இகழ்வீர்கள். ஆர்.எஸ்.எஸ் அவரை உதாரணமாக காட்டுகிறது என்பதாலே அவர் செய்வது தவறாகிவிடுமா. அவர் இந்த்துவ அமைப்புகளுக்கு சார்பாகப் பேசினாரா இல்லை அரசியலில் ஈடுபட்டாரா. இந்திரா காந்தி
காலத்திலிருந்தே அவர் விஞ்ஞானியாக இருக்கிறாரே.அப்போதிலிருந்தே அவர் அப்படித்தானே இருக்கிறார். பிஜேபி,ஆர் எஸ் எஸ் ஆசாமிகளுக்காக தன்னை மாற்றிக் கொண்டாரா. சுடலைமாடனுக்கு கலாம் தேர்தலில் நின்ற போது அவருக்கு எதிராக இடது சாரிகள் ஒருவரை நிறுத்தியதும், அப்போது கலாமின் அறிவியல் சாதனைகளை கேள்விக்குட்படுத்தி பிரண்ட்லைன் எழுதியதும் மறந்திருக்கும். இடதுசாரிகள் அவர் குடியரசு தலைவர் ஆவதை எதிர்த்தார்கள் என்பதாலேயே அவரை ஆர்.எஸ்.எஸ் ஆசாமி என்று இன்னும் ஏன் எழுதவ்வில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
பாவம் இளையராஜா, இசையையும், ஆன்மிகமும் தவிர பிறவற்றில் அதிக அக்கறை காட்டாமல் இருக்கிறார். தலித் முரசில் பத்தி எழுதினால், அல்லது தொல்.திருமாவினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டால் நீங்கள் அங்கீகரிப்பீர்கள் என்பது அவருக்கு தெரியாமல் போய்விட்டது. அல்லது குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ் ஒழிக, பார்பனீயம் ஒழிக என்று ஒரு அறிக்கையைவாது வெளியிட்டிருக்க வேண்டும். மனிதன் சதாம் உசேனை தூக்கில் போட்டதைக் கூட கண்டித்து அறிக்கை விடாமல் இருக்கிறாரே.

போகிற போக்கில் ஆர்.எஸ்.எஸ் ஐன்ஸ்டினை பாராட்டினால் அவரையும் சகட்டு மேனிக்கு விமர்சிக்க
ஆரம்பித்துவிடுவீர்கள் போலிருக்கிறது.

/*ஒரு இஸ்லாமியர் என்றால் பகவத் கீதையை படிக்க கூடாது, மாமிசம் உண்ண வேண்டும், தன் மத நம்பிக்கைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் ஒரு வரையரை செய்வீர்கள். அப்புறம் அவர் அவ்வாறில்லை இன்று இகழ்வீர்கள். ஆர்.எஸ்.எஸ் அவரை உதாரணமாக காட்டுகிறது என்பதாலே அவர் செய்வது தவறாகிவிடுமா.*/

தவறு என்று இங்கு யாருமே சொன்னதாகத் தெரியவில்லை. ஆயினும், தமிழர்களின் இணைய விவாதங்களை எட்டி நின்று வேடிக்கைப் பார்க்கத் தொடங்கி ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த விவாதம் இப்படித்தான் திரிக்கப்படும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். இதைக் குறித்து எழுதத் தயங்கியதும் அதன் காரணமாகவே. சங்கரப்பாண்டி மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்: "அப்துல் கலாம் அவர்களின் திறமையையும், பங்களிப்பையும் பெரிதும் போற்றுகிறேன். அவர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களையும், விருப்பங்களையும் மதிக்கிறேன்".

விமரிசனம் கலாம் அவர்களைப் பற்றியதல்ல, புனிதபிம்பத் தொழிற்சாலை அதிபர்களைப் பற்றியது. நீங்கள் எழுதியதையே சற்று மாற்றி யோசித்துப் பாருங்கள். கலாம் இப்போது இருப்பது போலவே ஒருத் திறமையான அறிவியலாளராக இருந்து, அதே நேரத்தில் மாமிசம் உண்ணுபவராகவும், கீதைப் படிக்காதவராகவும், மடாதிபதிகளிடம் தேடிச் சென்று ஆசி பெறாதவராகவும் இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் அவரை ஆதரித்திருக்குமா? ஊடகங்கள் அவரை விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட மாமனிதராக ஆக்கியிருக்குமா?

/*பாவம் இளையராஜா, இசையையும், ஆன்மிகமும் தவிர பிறவற்றில் அதிக அக்கறை காட்டாமல் இருக்கிறார். */

அது அவரது உரிமை. இங்கேப் பேசப்படுவது அதுவல்ல. நம்மில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் தான் உண்டு தன் வேலையுண்டு என்று சமுக அக்கறை இல்லாமல் இருக்கிறோம். பல சாதனையாளர்களும் கூட இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இளையராஜாவுக்கு இருக்கும் ஊடகப் பிம்பம் கிடைக்கவில்லையே. தான் பிறந்த சமூகத்தோடு அடையாளப்படுத்தப்படுவதை அறவே (எதிர்த்து வழக்குப் போடும் அளவிற்கு) விரும்பாத, அதே நேரத்தில் உச்ச அடுக்கில் இருக்கும் மற்றொரு சமூகத்தின் அடையாளங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளும் இளையராஜா மட்டும் ஏன் புனித பிம்பம் ஆக்கப்பட்டார் என்பது தான் இங்கு விவாதப் பொருள்.

ஒரு ஆள்மாறாட்டப் பின்னூட்டத்தை நீக்கும் போதுத் தவறுதலாக காசியின் பின்னூட்டத்தையும் அதற்கான என் பதிலையும் சேர்த்து நீக்கிவிட்டேன். அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தவறுதலாக நீக்கப்பட்ட பின்னூட்டம் கீழே:

Kasi Arumugam has left a new comment on your post "நவீன மெக்காலேக்கள்: சமூகநீதி எதிர்ப்பு அரசியல்":

ஜெகத்,
ஆழமான அருமையான கட்டுரை. இதில் வரும் பெரும்பாலான கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கின்றன. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

தமிழ் பதிவுலகின் முன்னோடிகளில் முக்கியமானவரான காசியிடம் பாராட்டுப் பெறுவது மன நிறைவை அளிக்கிறது. நன்றி.

//விமரிசனம் கலாம் அவர்களைப் பற்றியதல்ல, புனிதபிம்பத் தொழிற்சாலை அதிபர்களைப் பற்றியது. நீங்கள் எழுதியதையே சற்று மாற்றி யோசித்துப் பாருங்கள். கலாம் இப்போது இருப்பது போலவே ஒருத் திறமையான அறிவியலாளராக இருந்து, அதே நேரத்தில் மாமிசம் உண்ணுபவராகவும், கீதைப் படிக்காதவராகவும், மடாதிபதிகளிடம் தேடிச் சென்று ஆசி பெறாதவராகவும் இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் அவரை ஆதரித்திருக்குமா? ஊடகங்கள் அவரை விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட மாமனிதராக ஆக்கியிருக்குமா?
//
நீண்ட நாட்களாக கலாம் பற்றிய எனது எண்ணம் இது சட்டென்று இங்கே பார்த்தவுடன் கவர்ந்துவிட்டது, உங்கள் பிற பதிவுகளும் பார்த்தேன், மிக நன்றாக வந்துள்ளது

நன்றி

//ஒரு தலித்தின் வீட்டில் கல்யாணம் செய்வதற்கோ கறிச்சோறு உண்பதற்கோ தயாராக இல்லாத நிலையிலும் "நாம் அனைவரும் ஒன்று" என்ற பிரச்சாரம் மேற்கொள்வது இதன் ஒரு அங்கம்.//

ஜெகத் ...!

இது நிறைய சிந்திக்க வைக்கிறது... மொத்த பதிவும் அருமை அருமை !

பாராட்டுக்கள் !

இன்றுதான் உங்கள் பதிவைப்படித்தேன். பொறுமையாக தட்டச்சி இருப்பதற்கு முதலில் பாராட்டுக்கள். அருமையான கோர்வையான சிந்தனைகள், தெளிவான விவாதமும் கவர்ந்து கொள்கிறது

முக்கியமான குறிப்புகளைத் தந்த அய்யா சுடலைமாடன் அவர்களுக்கு நன்றி :)

இதை விடத் தெளிவாக இந்த 'மாய பிம்ப' அல்லது 'கட்டமைக்கப்பட்ட பிம்ப' அரசியலைத் தோலுரித்துக் காட்டமுடியாது!

எல்லாப் பெருந்தலைகளும் இங்கே உங்கள் பதிவுக்கு ஆஜராகி இருப்பது காண்கிறேன் - இது அரிதான நிகழ்வு ஜெகத்! வெகுசிலருக்கு மட்டும்தான் இது கிடைத்திருக்கிறது! வாழ்த்துக்கள்! :)

ஏற்கனவே என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் சொல்லியபடி நான் எதிர்பார்த்த அனானி வந்து என்னுடைய கருத்துக்களை அப்துல் கலாம் மீதான தாக்குதலாக திசைதிருப்ப முயற்சி செய்தார். அதற்கான சரியான பதிலைக் கொடுத்த ஜெகத்துக்கு என் நன்றி.

மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். என்னுடைய விமர்சனம் அப்துல் கலாம் மீதானது அல்ல. தனிப்பட்ட முறையில் அவரை உண்மையான மதச்சார்பற்றவராகவும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்துபவராகவும், மதவாத அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவும்தான் நான் கருதுகிறேன். ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பழக்க வழக்கங்களை அடிக்கடி முன் நிறுத்தி அப்துல் கலாமை தங்களுடைய இந்துமயமாக்கும்-சமஸ்கிருதமயமாக்கும் அரசியலுக்குப் பயன்படுத்துவதையே குறிப்பிடுகிறேன்.

//» நியோ / neo எழுதியது:
முக்கியமான குறிப்புகளைத் தந்த அய்யா சுடலைமாடன் அவர்களுக்கு நன்றி :)
//

நியோ, என்னை அய்யா என்றெல்லாம் அழைக்காதீர்கள், எனக்குத் தலைதான் கொஞ்சம் நரைத்திருக்கிறது, ரொம்பவும் வயசாகிட வில்லை :-)

அதைவிட முக்கியமான ஒரு காரணமுண்டு, முன்னரே ஒருமுறை நான் தான் நியோ என்ற பெயரில் எழுதுவதாக மறைமுகமாகக் குறிப்பிட்டு முகமூடி பதிவில் உங்களை ஒருவர் அடித்தாடியதாகக் கேள்வி. நீங்கள் என்னை அய்யா என்றழைக்க இன்னொரு முறை இரண்டு பேரும் அடி வாங்க வேண்டாமே :-)

நன்றி - சொ. சங்கரபாண்டி

"உடன் பணிபுரிந்த நண்பர்களால் கலாம் அய்யர் என்று அழைக்கப்படும் அளவிற்கு கலாச்சார ரீதியாகத் தன்னை மாற்றிக்கொண்ட அப்துல் கலாம் "

"ஒரு இஸ்லாமியர் / தலித் எப்படி இருக்கவேண்டும் என்று ஆதிக்க சக்திகள் விரும்புகின்றனவோ அதற்கு பல படிகள் மேலே அப்துல் கலாமும் இளையராஜாவும் இருக்கிறார்கள்."

"தவறு என்று இங்கு யாருமே சொன்னதாகத் தெரியவில்லை"

What a brilliant logic :).I think you can start a certifying agency
to certify like the ISO standards.
In other words 'Politically Correct Progressive' , Politically
Incorrect Hence Nonprogressive' etc
can be some categories.

கலாம் இப்போது இருப்பது போலவே ஒருத் திறமையான அறிவியலாளராக இருந்து, அதே நேரத்தில் மாமிசம் உண்ணுபவராகவும், கீதைப் படிக்காதவராகவும், மடாதிபதிகளிடம் தேடிச் சென்று ஆசி பெறாதவராகவும் இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் அவரை ஆதரித்திருக்குமா?.

Kuzhaliji,Abdul Kalamji became president of india with the
support of Dr.Ramadossji.When his name was proposed PMK was in the NDA. By supporting him PMK has only
helped RSS.Do you agree with this
view.

Anonymous: The first two statements quoted by you are well-known and generally accepted views about Kalam and Raja. To be honest, some elders in my family are extreme examples of this Sanskritisation process. I respect their right to do what they please and I don't pass judgement over their actions as individuals. My complaint is only with this trend being encouraged by oppressive forces for their own selfish reasons. The third statement, as you know, is in response to your attempts to misrepresent my (and Sankarapandi's) criticism of the image makers in the media as a criticism of Kalam.

கருத்துத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

என்னால் இந்த இடுகையை பார்க்க முடியவில்லை. ஏதோ ப்ளாகர் பிழைச்செய்தி வருகிறது. பின்னூட்டங்களைப் பிரசுரிக்க மட்டுமே முடிகிறது.

கூகிள் மேல் வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை. காணாமல் போயிருந்த இந்தப் பதிவு திரும்ப வந்துவிட்டது.

Pandian,

I prefer to communicate through e-mail, especially with people not known to me personally. My e-mail address is jagadg at gmail dot com.

//Kuzhaliji,Abdul Kalamji became president of india with the
support of Dr.Ramadossji.//

:) :) :) :) :) :) Super Anonymousji

//"'அன்' விகுதி) அவர்கள் மறந்தும் கூட நினைப்பதில்லை. ஓரு தலைமுறை முன்பு வரை தமிழ்நாட்டில் கேட்டறியாத பொருள் தெரியாத வட இந்திய பெயர்களை சூட்டுவதே புரியாத சில பேர்க்கு புது நாகரீகமாக இருக்கிறது."

அப்படியா ஜெகத்? :))))

அன்புடன்,
டோண்டு நரசிம்மன் ராகவன் //

ஜெகத் 'அன்' விகுதி என்று சொன்னது தமிழ்ப்பெயர்களைத்தான் என்று நான் புரிந்துகொள்கிறேன். டோண்டு அவர்கள் சொல்லியுள்ளது போல அனைத்து அன் விகுதி பெயர்களும் அல்ல. இதை நீங்களும்(ஜெகத்) சரியாக புரிந்து கொள்ளாமல் அவருக்கு பதிலளித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

கிஷோர், ஹ்ரித்திக், ரோஹன் போன்ற பெயர்களை வைப்பது சரியானது அல்ல என்றே நானும் நினைக்கிறேன்.

கிரிக்கெட் பற்றி நீங்கள் சொன்னது அனைத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கிரிக்கெட் இயல்பாக பாமரர்களிடம் பரவவில்லை என்பது சரியாக இருக்கலாம். ஆனால் அது பார்ப்பனர்களால்தான் பரவியது என்பது எனக்கு சரியென்று படவில்லை. கிரிக்கெட் எழுச்சி என்பது 1983-ல் நாம் உலகக்கோப்பையை வென்ற பிறகே ஏற்பட்டது. இப்போது சானியாவின் வெற்றிகளைத்தொடர்ந்து டென்னிஸ் மக்கள் மனங்களை வென்று கொண்டிருப்பதைப்போல. நான் முதலில் கால்பந்துதான் விளையாடப்பழகினேன். அதுவும் கால்பந்தை மிகவும் ஊக்குவிக்கும் எனது பள்ளியினால்(மேதகு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் படித்த பள்ளி) ஏற்பட்டது. ஆனால் கிரிக்கெட் எனக்கு அறிமுகமானது நண்பர்களால் மட்டுமே. அதில் பிராமண நண்பர்கள் குறைவு. சொல்லப்போனால் இல்லவே இல்லை. மேலும் கிரிக்கெட் மீதான வெறுப்பே என் தந்தை முதலான முந்தைய தலைமுறையினரிடம் இன்றும் இருக்கிறது.
தமிழரல்லாத மற்ற மாநிலத்தவரிடம் ஆங்கில கலப்பு குறைவு என்று எழுதி இருக்கிறீர்கள். உங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் எனக்கும் பிற மாநில நணபர்கள் கொஞ்சம் உண்டு. அவர்களிடம் பழகிய அனுபவத்தில் சொல்கிறேன். மற்ற மாநிலத்தவர் நாம் பயன்படுத்தும் சில ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லயென்றாலும் நாம் பயன்படுத்தாத சில ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். நாம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதாலேயே பொதுவாக எல்லோருக்கும் அப்படி ஒரு எண்ணம் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்.

// பத்மகிஷோர் எழுதியது:
இப்போதைய ஊடகங்கள் கிரிக்கட்டையும் ஓரம்கட்டி, டென்னிஸ் , கோல்ஃப் , ஃபார்முலா 1 என்று புதிய மேட்டுக்குடி விளையாட்டுக்களை ப்ரதானப்படுத்துவதைப் பார்க்கலாம். அடுத்த தலைமுறையில் இவையும் வெகுஜென விளையாட்டுக்களாக மாறும் , ஆக இது முடிவே இல்லாத ஒரு தொடர்.//
மேலே சொன்ன விளயாட்டுக்களெல்லாம் அனைத்துலக விளையாட்டுக்கள்( international games). இப்படி அனைத்துலக விளையாட்டுக்களெல்லாம் மேல்குடி அல்லது பார்ப்பனர்களின் விளையாட்டுக்கள் என்று சொல்வது சரியான அணுகுமுறையாக எனக்குத் தோன்றவில்லை.

பரதநாட்டியம் பற்றி சொல்லியிருந்தீர்கள். அதிலும் எனக்கு சில மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன. பொதுவாக பார்ப்பனர்கள் சில நல்ல விசயங்களை ஏற்றுக்கொள்வது போலவே பரதநாட்டியத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களே தவிர அது பார்ப்பனர்களுக்கு சொந்தமானது இல்லை. பரதநாட்டியம் தேவரடியார்கள் மட்டுமே ஆடிய நடனக்கலை அல்ல. அது சிவனுடைய நாட்டியம். அது இழிவானதல்ல. அது தேவரடியார்களின் நாட்டியம் என்று அதை ஒரு சிறு வட்டத்தில் அடைப்பது சரிவராது.

//அதே நேரத்தில் 'உயர்'சாதியினரில் பலரும் மற்ற சமூகத்தினருடன் உரையாடும்போது பேச்சில் தம் சாதி வழக்கை தவிர்க்க முயல்வதில்லை. //
இது கண்டிப்பாக தவறு. பார்ப்பனர்கள் மற்றவர்களுடன் பேசும்போது மிக கவனமாக அவாள் மொழியை தவிர்க்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசியிலோ அல்லது வீட்டிலோ பேசும்போது அவாளை பயன்படுத்துகிறார்கள். இதை நான் பலமுறைப் பார்த்திருக்கிறேன்.

//ரவிசங்கர் எழுதியது:
சிந்தனையைத் தூண்டும் பதிவு. நன்றி. இப்பொழுது தொலைக்காட்சிகள் வெற்றிகரமாய் பரப்பும் இன்னொரு மேல்தட்டுப் பண்பாடு - கருநாடக இசை :(
//
மீண்டும் ஒரு சிறு கருத்து. கருநாடக இசையும் மேல்தட்டுப் பண்பாடென்பது சரி. ஆனால் அது பார்ப்பனர்களுக்கு மட்டும் உரிமையுடையதல்ல. அதை வளர்த்தவர்கள் பார்ப்பனர்கள் அல்ல. பல கர்நாடக மேதைகள் பார்ப்பனர்கள் அல்ல. கர்நாடக இசை சென்னையில் சிறைபட்ட பிறகுதான் பார்ப்பன்ர்கள் அதை ஆக்ரமித்தார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

மற்றபடி மேலைநாட்டவர் அல்லது மேல்குடியினரின் பழக்கவழக்கங்களை அப்படியே நகலெடுக்கூடாது என்ற உங்கள் மையக்கருத்தில் நான் அப்படியே உடன் படுகிறேன்

உமையணன்,

விரிவானக் கருத்துக்களுக்கு நன்றி. நேரமின்மைக் காரணமாக சுருக்கமாக சிலவற்றைச் சொல்லிவிடுகிறேன்.

//கிரிக்கெட் எழுச்சி என்பது 1983-ல் நாம் உலகக்கோப்பையை வென்ற பிறகே ஏற்பட்டது.//

ஒலிம்பிக் போட்டிகளில் எட்டு முறை ஹாக்கியில் தங்கம் வென்றோம். கடைசியாக 1980-ல். ஆனால் ஒரு எழுச்சியும் ஏற்படவில்லையே. ஏற்படவும் செய்யாது. சென்னையில் குடிசைப்பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் ஹாக்கி விளையாடுவதைப் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். எங்கள் ஊரில் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் சிறு வயதில் ஹாக்கி மட்டை வாங்க காசில்லாமல் உடைந்த குடைக் கம்பிகளை வைத்து விளையாடியதாகச் சொல்வார். ஆனால் நான் அறிந்தவரை சமூகத்தின் மேல்தட்டைச் சேர்ந்த பையன்கள் இந்த விளையாட்டை சீண்டமாட்டார்கள். டெண்டுல்கர் மற்றும் தன்ராஜ் பிள்ளை ஆகியோரின் பின்புலத்தைப் பாருங்கள், விளங்கக்கூடும். இந்திய ஹாக்கி இப்போது அழிவின் விளிம்பில்.

//இது கண்டிப்பாக தவறு. பார்ப்பனர்கள் மற்றவர்களுடன் பேசும்போது மிக கவனமாக அவாள் மொழியை தவிர்க்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசியிலோ அல்லது வீட்டிலோ பேசும்போது அவாளை பயன்படுத்துகிறார்கள். இதை நான் பலமுறைப் பார்த்திருக்கிறேன்.//

பார்த்திருக்கலாம். ஆனால் இதையும் கொஞ்சம் பாருங்கள். எங்கள் ஊர் எழுத்தாளர் ஒருவர் - நாவல் எழுதும் அளவுக்கு 'பொதுவான' தமிழ் தெரிந்தவர் - அமெரிக்கா சென்று அங்குள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். அதில் அவர் பேசிய சில வரிகள்:

"எல்லா இண்டியன் மேகசைன்ஸ்லயும் லெட்டர்ஸ் போடுறா. அவா differ பன்ற லெட்டர்சும் போட்டுண்டுதான் இருக்கா... ஆனா, நீ புளிய மரத்தின் கதையைப் பத்திப் பேசறியே, அது நேக்கு சந்தோஷமா இருக்கு.

...ஏதாவது ஒண்ணு wit அவன் சொல்லிண்டே இருப்பான்....அவருக்குத் தமிழ்ல பற்று இல்லை என்பேளா? அவருக்குப் பேசத் தெரியலை என்பேளா?"

மறைந்துவிட்ட ஒரு எழுத்தாளரை நான் குறை சொல்வதாக தயவுசெய்து நினைக்கவேண்டாம். நான் எழுதியதை நீங்கள் இவ்வளவு உறுதியாக மறுத்ததால் தான் நாம் நன்கு அறிந்த ஒருவரை உதாரணமாக முன்வைக்க வேண்டியதாயிற்று. இன்னொரு சமூகத்தை சேர்ந்த ஒரு எழுத்தாளர் இதேபோல் அமெரிக்கத் தமிழர்களுடன் நடக்கும் ஒரு கலந்துரையாடலில் "அவுக போடுவாக" என்றோ "அவிய போனாவிய" என்றோ தம் சாதி வழக்கில் பேசுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அதனால் தான் சொல்கிறேன் சில சாதியினருக்குத் தங்கள் சாதி அடையாளங்களை பொதுவில் வெளிப்படுத்துவதில் எவ்வித தயக்கமும் இல்லை. மற்றவர்களோ தங்கள் குலக்குறிகளை மறைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.